3வது அணிக்கு வாய்ப்பே இல்லையாம்: காங்கிரஸ், பாஜக பாடும் 'உதறல் கோரஸ்'
டெல்லி: தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்போம் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் அழைப்பு விடுத்திருப்பது நடக்கப் போவது இல்லை என்று காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வருகிறது சமாஜ்வாடி கட்சி. சமாஜ்வாடி கட்சியின் ஆதரவு இல்லாமல் போனால் மத்திய அரசு கவிழ்ந்துவிடும் நிலையே இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமாஜ்வாடி கட்சி தரப்பில் மத்திய அரசுக்கு எதிரான கருத்தே தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதன் உச்சமாக காங்கிரஸ், பாரதிய ஜனதா அல்லாத ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் மூன்றாவது அணி அமைக்க அழைப்பு விடுத்திருந்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரஷித் ஆல்வி கூறுகையில், மூன்றாவது அணிக்கு வாய்ப்பு இருப்பதாக நான் கருதவில்லை. மூன்றாவது அணி ஆட்சி அமைத்தால் அது விரைவிலேயே கவிழ்ந்து விடுகிறது என்பதுதான் வரலாறு. மூன்றாவது அணியை ஒருபோதும் மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றார்.
பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் பல்பீர் புஞ்ச் கருத்து தெரிவிக்கையில், மூன்றாவது அணி என்பது செய்தியில் அடிபட்டுக்கொண்டிருக்கும். ஆனால் அது நிறைவேறாது. அப்படி ஒரு அணி உருவாகாது என்றார்.
இப்படி ஒரு அணி உருவானால் காங்கிரசும் பாஜகவும் ஆட்சிக்கு வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் எல்லா விவகாரங்களிலும் வேறுபடும் இந்த கட்சிகளும் மூன்றாவது அணி விஷயத்தில் மட்டும் இரண்டும் சேர்ந்து கோரஸ் பாடுகின்றன.












Click it and Unblock the Notifications