பத்மஸ்ரீ, சாகித்ய அகாடமி விருதுகள் பெற்ற எழுத்தாளர் மானே மீது 3 பெண்கள் கற்பழிப்பு புகார்

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டம் ஜகத்வாதியில் உள்ளது சாரதாபாய் பவார் ஆஷ்ரம் சாலா பள்ளி. நாடோடிகள் மற்றும் பழங்குடியினருக்கான அந்த பள்ளியின் தலைவராக உள்ளவர் முன்னாள் எம்.எல்.சியும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான லக்ஷ்மண் மானே (64). அவர் மீது அதே பள்ளியில் சமையல் வேலை செய்யும் 3 தலித் பெண்கள் பாலியல் பலாத்கார புகார் கொடுத்தனர்.
30 முதல் 35 வயது வரையிலான அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் மானே மீது கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து சதாரா தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீரங் லாங்கே கூறுகையில்,
மானே அந்த 3 பெண்களையும் நிரந்தர ஊழியர்களாக ஆக்குவதாக உறுதியளித்து அவர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். அவர் திருமணமான அந்த பெண்களை புனே, சதாரா உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்துச் சென்று கற்பழித்துள்ளார். இவ்வாறு அந்த பெண்கள் எங்களிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக மானேவை கைது செய்ய அவரது வீட்டுக்கும், அவர் அடிக்கடி செல்லும் இடங்களுக்கும் சென்றோம். ஆனால் அவரை எங்கும் காண முடியவில்லை என்றார்.
இது குறித்து எழுத்தாளரான மானேவின் மனைவி சஷிதாய் கூறுகையில்,
எனது கணவரின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்றே இவ்வாறு செய்கின்றனர். சமூக சேவை செய்யும் அவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு எங்களை மட்டும் அல்ல அவரது ரசிகர்கள், தொண்டர்களையும் அவமதித்துவிட்டது. எனது கணவருக்கு பல முறை கொலை மிரட்டல் வந்துள்ளது. அந்த பள்ளியை சீரமைக்க அவர் பாடுபட்டார். கடந்த 6 ஆண்டுகளில் அங்கு பணிபுரிந்த ஊழல் ஊழியர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வைத்தார். அவருக்கு வேண்டாதவர்கள் அப்பெண்களை வைத்து போலீசில் புகார் கொடுக்க வைத்துள்ளனர். அந்த பெண்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சதாரா மாவட்டம் கரஞ்சா கிராமத்தைச் சேர்ந்த மானே 10 புத்தகங்கள் எழுதியுள்ளார். பந்த் தர்வாசா என்ற பத்திரிக்கை ஆசிரியராக உள்ளார். மராத்தியில் எழுதப்பட்ட அவருடைய சுயசரிதையான உபாரா இந்தி, குஜராத்தி, தமிழ், மலையாளம், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
1981ம் ஆண்டு அவருக்கு சாகித்ய அகாடமி விருதும், 2009ல் பத்மஸ்ரீ விருதும் கிடைத்தது. அவர் ஆதிவாசி சாகித்ய சம்மேளனம், அஸ்மிதாதர்ஷ் சாகித்ய சம்மேளனம், அம்பேத்கர்வாடி தலித் சாகித்ய சம்மேளனம் மற்றும் சமதாவாடி சாகித்ய சம்மேளனம் ஆகியவற்றின் தலைவராக இருந்துள்ளார். மேலும் அவர் 1990 முதல் 1996ம் ஆண்டு வரை எம்.எல்.சி.யாக இருந்துள்ளார். அவர் நாடோடி பழங்குடியினத்தவர் வீட்டில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications