மதுரையிலிருந்து சென்னை வந்த பஸ்சில் ரூ.2.3 கோடி மதிப்பு தங்கம் கொள்ளை
சென்னை: மதுரையில் இருந்து சென்னை வந்த தனியார் பஸ்சில் ரூ. 2.3 கோடி மதிப்பிலான 7.5 கிலோ தங்கம் கொள்ளை போனது.
சென்னை பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் மோகன்லால் ஜூவல்லரி என்ற பெயரில் நகை கடை நடத்தி வருபவர் சுரேஷ் கத்ரி. இவரது கடையில் ஊழியராக இருப்பவர் ஷம்பாலால் (26). ராஜஸ்தானை சேர்ந்த ஷம்பாலால் ஆபரணங்கள் செய்வதற்கான தங்க கட்டிகளை, வாரம் ஒரு முறை மதுரைக்கு சென்று அங்கிருந்து வாங்கி வருவது வழக்கம்.
நேற்று 7.5 கிலோ தங்க கட்டிகளை வாங்கி கொண்டு ஊழியர் ஷம்பாலால் மதுரையில் இருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ்சில் புறப்பட்டுள்ளார்.
24 பயணிகளுடன் தூங்கும் வசதி கொண்ட அந்த பஸ்சில் அவர் மேலே படுத்து இருந்தார். தங்க கட்டிகள் கொண்ட பேக்கை கீழே வைத்து பூட்டு போட்டு பூட்டி இருந்தாராம். இன்று காலை கோயம்பேட்டுக்கு பஸ் வந்த போது அவர் தூங்கி கொண்டிருப்பதக் கண்ட கிளீனர் அவரை தட்டி எழுப்பினார். அவர் கீழே இறங்கி பேக்கை பார்த்த ஷம்பாலால் அதிர்ச்சி அடைந்தார். பேக் கிழிக்கப்பட்டு உள்ளே இருந்த 7.5 கிலோ தங்க கட்டிகள் கொள்ளை போய் இருந்தன.
கொள்ளை போன தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.2.30 கோடி. ஓடும் பஸ்சில் தங்கம் கொள்ளை போன சம்பவம் கோயம்பேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீஸ் நிலையத்தில் ஷம்பாலால் புகார் செய்ததையடுத்து, இன்ஸ்பெக்டர் சேட்டு இதுகுறித்து விசாரணை நடத்திவருகிறார்.
பஸ்சில் பயணம் செய்தவர்கள் தான் தங்க கட்டிகளை கொள்ளையடித்து இருக்க வேண்டும். ஷம்பாலால் மதுரையில் இருந்து பஸ்சில் தங்க கட்டிகளுடன் ஏற இருப்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளையர்கள் பயணிகள் போல நடித்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அந்த பஸ்சில் பயணம் செய்தவர்களின் பெயர் விவரம் மூலம் அவர்களை வரவழைத்து அவர்கள் பற்றிய விவரங்களை போலீசார் கேட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஊழியர் ஷம்பாலாலிடம் தங்க கட்டிகள் கொள்ளை போனதை குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications