படியில் பயணம் செய்த இளம் பெண் தூக்கி வீசப்பட்டு மரணம்: பஸ் எரிப்பு… டிரைவருக்கு அடி உதை
கோவை: கோவை அருகே பஸ் படிக்கட்டில் பயணம் செய்த இளம் பெண் தூக்கி வீசப்பட்டு மரணமடைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் டிரைவருக்கு அடி உதை கொடுத்து பஸ்சை தீவைத்து கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் காரமடையை அருகே உள்ள கண்ணார்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகள் ஹேமலதா(வயது20). துடியலூர் அருகே தொப்பம்பட்டியில் உள்ள செயற்கை வைர தயாரிப்பு தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
நேற்று காலை 7-30 மணியளவில் வேலைக்கு செல்வதற்காக மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற தனியார் பேருந்தில் ஹேமலதா ஏறினார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ்சின் படிக்கட்டில் ஹேமலதா நின்றுகொண்டு பயணம் செய்துள்ளார். சின்னமத்தம்பாளையம் அருகே வளைவில் திரும்பும்போது தனியார் பஸ் டிரைவர் திடீரென்று பிரேக் போட்டார். இதனால் ஹேமலதா நிலை தடுமாறி தூக்கி வீசப்பட்டார்.
சாலையில் விழுந்த அவர் மீது பஸ்சின் பின்பக்க டயர் மீது ஏறி இறங்கியது. இதனால் உடல் நசுங்கியும், தலைசிதறியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு பெண் பயணி மரகதம் என்ற பெண்ணும் ரோட்டில் விழுந்தார். இருந்தாலும் சிறு காயத்துடன் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இளம்பெண் உடல் நசுங்கி இறந்ததை பார்த்த மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். எனினும் பஸ்சை நிறுத்தாமல் டிரைவர் தொடர்ந்து வேகமாக ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது இதனால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் கடும் ஆத்திரம் அடைந்தனர். விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினரும் பஸ்சை பின்தொடர்ந்து விரட்டி வந்து மறித்தனர். பஸ் டிரைவர் சந்தோஷ்குமாரை பிடித்து தர்ம அடிகொடுத்தனர். கண்டக்டர் பாபுவையும் தாக்க முயன்றனர். இதனால் கண்டக்டர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டனர்.
தீவைத்த பொதுமக்கள்
ஆத்திரத்தில் இருந்த பொதுமக்களும், பயணிகளும் தனியார் பஸ் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி பஸ்சுக்கு தீ வைத்தனர். நடுரோட்டில் பஸ் கொழுந்துவிட்டு எரிந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று பஸ்சில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர். இருந்தாலும் பஸ் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
சாலை மறியல்
விபத்துக்கு காரணமான பஸ் டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்வரை பலியான ஹேமலதாவின் பிணத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த விடமாட்டோம் என்று கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டுப்பாளையம் ரோட்டில் சாலைமறியலிலும் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கோயில்பாளையம் வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்களை சமாதானப்படுத்தினார்கள். விபத்துக்கு காரணமான பஸ் டிரைவர் சந்தோஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அதிவேக பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications