பாஜகவில் இருந்து கர்நாடகா அமைச்சர் ரேணுகாச்சார்யா நீக்கம்
பெங்களூர்: கர்நாடகாவில் எதியூரப்பா ஆதரவு அமைச்சரான ரேணுகாச்சார்யா பாஜகவில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 5-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பாஜக மும்முரம் காட்டி வருகிறது. இந்நிலையில் அமைச்சர் ரேணுகாச்சார்யா நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் முன்னாள் முதல்வர் சதானந்த கவுடாவை கடுமையாக விமர்சித்தார்.
இது பற்றி அவர் கூறுகையில், சதானந்தா முதல்வராக இருந்த போதும் எம்.பி.யாக இருந்த போதும் நானே அவருக்கு நிறைய பணம் கொடுத்திருக்கிறேன். அவர் ஒன்றும் ஹரிச்சந்திரன் அல்ல. இதற்காக எந்த கடவுள் முன்பும் சத்தியம் செய்ய தயாராக இருக்கிறேன் என்றார்.
மேலும் பாஜக அமைப்பு செயலாளர் சந்தோஷ், துணை பதிவாளர்கள் பதவி நியமனத்துக்கு நிறைய பணம் வாங்கியுள்ளார் என்றார்.
இதேபோல் கடந்த சில வாரங்களாக குறிப்பாக சதானந்தா கவுடாவை இலக்கு வைத்து அவர் விமர்சனம் செய்து வந்ததால் அவர் பாஜகவில் இருந்து விலகி எதியூரப்பாவின் கர்நாடகா ஜனதா கட்சிக்கு தாவுவார் என்று கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் கட்சிக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டதாகவும், அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கையாக அவர் பாஜக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications