சென்னையில் வெளிநாட்டு கார்களை சிபிஐ அதிகாரிகள் தேடிக்கிட்டே இருக்காங்க!
சென்னை: வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்து வரி ஏய்ப்பு செய்த அலெக்ஸிடம் இருந்து வாங்கப்பட்ட கார்களில் 4 கார்களை தேடி சென்னையில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
விலை உயர்ந்த வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்து அவற்றை முக்கிய பிரமுகர்களுக்கு விற்பனை செய்த கேரளாவைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவர் கோடிக் கணக்கில் வரி ஏய்ப்பு செய்தது அண்மையில் வெளிச்சத்திற்கு வந்தது. அவரிடம் இருந்து கார்களை வாங்கியவர்களின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுவரை சென்னை உள்பட 33 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
அலெக்ஸால் அரசுக்கு ரூ.48 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. அப்படி இருந்தும் அவரிடம் புலனாய்வுத் துறை சரியாக விசாரணை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து தான் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அலெக்ஸ் மற்றும் இந்த வழக்கை சரியாக விசாரிக்காத புலனாய்வுத் துறை அதிகாரி முருகானந்தம் ஆகியோர் மீதான பிடி இறுகியுள்ளது. இந்த வழக்கு தொடர்பான முக்கிய தடயங்கள் மற்றும் ஆதாரங்களை சிபிஐ அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆவடியில் உள்ள மத்திய பாதுகாப்பு படை டிஜஜி நாகராஜின் வீட்டில் நேற்று சிபிஐ சோதனை நடந்தது. இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு கார்களில் சிபிஐ அதிகாரிகளால் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் 4 கார்களைத் தேடி தான் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் நாகராஜின் வீட்டில் நடத்திய சோதனையில் எதிர்பார்த்தபடி எந்த தடயங்களும் சிக்கவில்லை. வெளிநாட்டு கார்கள் தொடர்பான ஆவணங்களை சேகரிப்பதில் சிபிஐ அதிகாரிகள் திணறுவதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications