திருச்சியில் காங்கிரசார்-மாணவர்கள் மோதல்: கொடி, பேனர்கள் கிழிப்பு... பதற்றம்
திருச்சி: திருச்சியில் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் மாணவர்களுக்கும் மோதல் மூண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களை கைது செய்யக்கோரி காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சி, கரூர், பெரம்பலூர் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மற்றும் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் எம்.பி. கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் காங்கிரசார் ஞானதேசிகனை வரவேற்று பிரமாண்ட பிளக்ஸ் பேனர்கள், டிஜிட்டல் போர்டுகள் வைத்தும், ஏராளமான காங்கிரஸ் கொடியும் கட்டியிருந்தனர். காலை 10.30 மணிக்கு கூட்டத்திற்கு வருவதாக இருந்த ஞானதேசிகன் எம்.பி., ஐ வரவேற்க மாவட்ட செயலாளர்களும் தொண்டர்களும் காத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த தமிழீழ மாணவர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் அங்கிருந்த பேனர்களை அடித்தும், கிழித்தும் சேதப்படுத்தினர். மேலும் காங்கிரஸ் கொடிகளையும் கிழித்து எறிந்தனர்.
இதைப்பார்த்த காங்கிரஸ் தொண்டர்கள், மாணவர்களை தாக்க கையில் உருட்டு கட்டைகளுடன் பாய்ந்தனர். சாலைகளில் கட்டைகளுடன் விரட்டியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். எனினும் மாணவர்கள் அவர்கள் கைகளில் சிக்காமல் தப்பி ஓடிவிட்டனர்.
இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போலீசார் காங்கிரஸ் தொண்டர்களை திரும்பி செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். இதற்கு காங்கிரசார் மறுக்கவே போலீசாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அதுவே தள்ளு முள்ளாக மாறியது.
இதையடுத்து வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரிஸ்டோ ரவுண்டானாவில் இருந்து மத்திய பஸ் நிலையம், திண்டுக்கல் ரோடு, விராலி மலை ரோடு ஆகிய பகுதிகளில் வாகன போக்குவரத்து முடங்கியதால் போலீசார் சமாதான முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் சமாதானம் செய்யவந்த போலீசாருடன் இளைஞர் காங்கிரஸ் தலைவர் முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. மாணவர்களுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பதட்டமான சூழல் நிலவியது.
ஞானதேசிகன் எம்.பி. கோரிக்கை
இத்தனை களேபரத்திற்கு இடையிலும் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ஞானதேசிகன் எம்.பி. கூறியதாவது:
இலங்கை பிரச்சினையில் மாணவர்கள் உண்மை நிலையை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். இந்த பிரச்சினையில் செல்வநாயகம் காலம் முதல் ஆயுதம் தாங்கி போராடிய 3 வது போரில் ஆயுத குழுக்கள் அழிக்கப்பட்டன. கடைசி கட்ட போரில் இலங்கை ராணுவத்தாலேயே ஈழத்தமிழர்கள் அழிக்கப்பட்ட கொடுமை நடந்தது. போரில் நடந்த மனித உரிமை மீறல்களை கண்டிப்பது என்பது வேறு.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் தமிழர்களை மறுகுடியமர்த்த வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்டவற்றை நமது அரசு அமைத்து தந்துள்ளது.
இலங்கை தமிழர்களின் மறுவாழ்விற்காக மத்திய அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது புரியாமல் மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஐக்கிய நாட்டு சபையின் விதிமுறைகள் தெரியாமல் இலங்கையில் தனி நாடு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சட்ட கல்லூரி மாணவர்கள் பொது வாக்கெடுப்பு, தனிநாடு என்று போராட்டங்கள் நடத்தி வருவது சரியல்ல. காங்கிரஸ் கட்சியின் பேனர்களையும் கிழிப்பது தவறு. மாணவர்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.
இது போல இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு செய்து வரும் பணிகளையும் உண்மை நிலை குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வருகிற 30-ந்தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications