நாங்கள் போட்டது நாடகம் என்றால் அதிமுக போடுவது ஓரங்க நாடகமா?... கருணாநிதி

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சட்டப்பேரவையில் மாணவர்கள் போராட்டம் பற்றி கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, இலங்கை பிரச்சினையிலே நான் ‘‘கபட நாடகம்'' ஆடுவதாகவும், ‘‘இரட்டைவேடம்'' போடுவதாகவும் பல பக்கங்கள் பேச்சினை தயார் செய்து கொண்டுவந்து அவையிலே படித்துள்ளார்.
ஜெயலலிதா தன் பேச்சின் துவக்கத்திலேயே தமிழர் நலன் கருதி மத்திய காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேற வேண்டுமென்று அவர் 2009-ம் ஆண்டே கூறியதாகவும், ஆனால் நானோ அனைத்துக்கட்சி கூட்டத்தைக்கூட்டி 2 வாரத்தில் போர் நிறுத்தத்துக்கு மத்திய அரசு முன்வராவிட்டால், தமிழகத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் ராஜினாமா செய்வார்கள் என்ற அளவில் தீர்மானம் நிறைவேற்றியதாகவும், பின்னர் மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி, என்னை சந்தித்த பிறகு, மத்திய அரசின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக இருக்கிறது என்று தெரிவித்து ராஜினாமா நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன் என்றும் கூறியிருக்கிறார்.
நானா நாடகம் போடுகிறேன்?
ஜெயலலிதா இதிலே எதை நாடகம் என்கிறார்?. இலங்கையிலே போர் கடுமையாக நடக்கிறது என்று கேள்விப்பட்டதும் உடனடியாக 14-10-2008 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது நாடகமா?. அந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் போர் நிறுத்தம் செய்ய முன்வராவிட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று தீர்மானம் நிறைவேற்றியது நாடகமா?. அந்தத் தீர்மானத்தை உடனடியாக பிரதமருக்கு அனுப்பி, பிரதமர் அரசியல் ரீதியான தீர்வுகாண மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் விரைவாக எடுத்திடும் என்று கூறியது அப்போதே பத்திரிகைகளில் வெளிவந்ததே, அது நாடகமா?.
அதிமுக போடுவது ஓரங்க நாடகமா?
ஜெயலலிதா தன் பேச்சில் ‘‘அனைத்துக்கட்சி கூட்டம்'' - ‘‘சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம்''-‘‘மனித சங்கிலி போராட்டம்''-‘‘நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல் கடிதங்களை கருணாநிதியே பெற்றுக்கொள்ளுதல்''-‘‘எல்லோரும் பிரதமருக்கு தந்தி அனுப்புங்கள்''- ‘‘டெல்லியில் பிரதமருடன் சந்திப்பு''- ‘‘வேலை நிறுத்தம்''-‘‘பேரணி''-‘‘தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் தீர்மானம்'' என பல்வேறு ‘‘கண்துடைப்பு'' நாடகங்கள்தான் அப்போது நடந்தன என்று சொல்லியிருக்கிறார் என்றால், தி.மு.க. பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது ‘‘கண்துடைப்பு'' என்றால், நேற்றையதினம் ஜெயலலிதா பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் கபட நாடகமா? ஓரங்க நாடகமா?.
ஈழத்தமிழர்களுக்கு தீர்வு கிடைத்துவிட்டதா?
தி.மு.க. மத்திய அரசில் இருந்து தற்போது வெளியேறிவிட்டது. இதனால் என்ன நடந்துவிட்டது?. ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு விடிவு ஏற்பட்டுவிட்டதா?. அமெரிக்க தீர்மானத்தில் இந்தியா திருத்தங்களை கொண்டு வந்து விட்டதா?. நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை திருத்தங்களோடு நிறைவேற்றிவிட்டதா?.
மத்திய அரசில் இருந்து தி.மு.க. வெளியேறியது மட்டும் தான் நடந்தது. ஆனால் அதற்காக தி.மு.க. சிறிதும் கவலைப்படவில்லை.2009-ல் தி.மு.க. மத்திய அரசில் இருந்து வெளியேறியிருந்தாலும் இதே நிலை தான் என்பதை நடுநிலையோடு சிந்தித்துப் பார்ப்பவர்கள் உணர்வார்கள். அப்போதே வெளியேறியிருந்தால் இலங்கைத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள் என்பதெல்லாம், தி.மு.க.வின்மீது பழியைப் போடுகின்ற ஒரு செயலே தவிர வேறல்ல என்பதுதான் உண்மை.
அனுமானத்தின் அடிப்படையில் ஒரு கருத்தை உறுதி செய்வதை, வரலாற்றை அறிந்தவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.இவ்வாறு கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications