சவூதியில் பணிபுரியும் தமிழர்களின் வேலையை காக்க வேண்டும் ஜி: பிரமதருக்கு ராமதாஸ் கோரிக்கை

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சவூதி அரேபியாவில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான தமிழக தொழிலாளர்களின் வேலைக்கு அந்நாட்டில் கொண்டுவரப்பட்ட நிதாகத் என்ற சட்டத்தின் மூலம் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
எண்ணெய் வள நாடான சவூதி அரேபியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட மொத்தம் 90 லட்சம் வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் தமிழர்களின் எண்ணிக்கை மட்டும் 3 லட்சத்திற்கும் அதிகமாகும். சவூதி அரேபியாவைச் சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து, 25 லட்சம் பேர் வேலையின்றி தவிப்பதால் அவர்களுக்கு வேலை வழங்குவதற்காக நிதாகத் சட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டு வந்திருக்கிறது.
அச்சட்டத்தின்படி, சவூதி அரேபியாவில் 10 பேருக்கும் அதிகமானவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களில் குறைந்த பட்சம் 10 சதவீத பணியிடங்கள் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். 2011ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தின் அம்சங்களை செயல்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட காலக்கெடு நேற்று முன்னாள் புதன்கிழமையுடன் முடிவடைந்துவிட்டது. சுமார் இரண்டரை லட்சம் நிறுவனங்களில் சவூதி அரேபியர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு வழங்கப்படாததை கண்டறிந்த சவூதி அரேபிய அரசு, அந்த நிறுவனங்களில் பணியாற்றும் வெளிநாட்டவர்களின் பணி உரிமங்களை புதுப்பிக்க முடியாது என்று அறிவித்துள்ளது. அவ்வாறு பணி உரிமங்கள் முடிவடைந்த அனைவரும் உடனடியாக தாயகம் திரும்ப வேண்டும்; இல்லாவிட்டால் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவர் என்று சவூதி அரசு எச்சரித்துள்ளது. இதற்கான அதிரடி ஆய்வுகள் சவூதியின் பல்வேறு பகுதிகளில் தொடங்கியுள்ளன.
சவூதி அரசின் இந்த நடவடிக்கையால் மொத்தம் 20 லட்சம் பேர் வேலை இழப்பார்கள் என்றும், அவர்களில் தமிழர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான இந்தியர்களும் அடக்கம் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் சவூதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பணியாற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஊதியத்தை நம்பியே வாழ்கின்றன. அரேபிய அரசின் அதிரடி நடவடிக்கையால் தமிழ் தொழிலாளர்கள் வேலை இழந்து திரும்பினால் அவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடும் அவலம் ஏற்படும். வறட்சி காரணமாக தமிழகத்தில் ஏற்கனவே பலர் வேலையில்லாமல் தவிக்கும் நிலையில், லட்சக்கணக்கில் வட்டிக்கு கடன் வாங்கிக் கொண்டு சவூதி வேலைக்குச் சென்றோரும் திரும்பினால் அதனால் ஏற்படும் தாக்கம் மிகக் கடுமையானதாக இருக்கும்.
சவூதி அரேபிய மக்களின் வேலைவாய்ப்புக்காக அந்நாட்டு அரசு எடுக்கும் நடவடிக்கைகளை குறை கூற முடியாது. அதேநேரத்தில் அந்நாட்டின் முன்னேற்றத்திற்கு தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்திய தொழிலாளர்கள் அளப்பரிய பங்களிப்பை அளித்துள்ளனர் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதைக் கருத்தில் கொண்டு தமிழர்கள் உள்ளிட்ட இந்தியத் தொழிலாளர்கள் தங்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்திக் கொண்டு தாயகம் திரும்ப வசதியாக, நிகாதத் சட்டத்தின் அமலாக்கத்தை இன்னும் சிறிது காலத்திற்கு ஒத்திவைக்கும்படி சவூதி அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்; இப்பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications