புதுக்கோட்டை நகராட்சி கூட்டத்தில் கை கலப்பு, மைக் உடைப்பு: திமுக வெளிநடப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சியின் 2013-2014ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் மக்கள் நலத்திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டதுடன், மைக் உடைப்பு சம்பவமும் நடைபெற்றது.
புதுக்கோட்டை நகராட்சியின் 2013-2014ம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யும் கூட்டம் மற்றும் இயல்பு கூட்டம் தலைவர் பொறுப்பு அப்துல் ரகுமான் தலைமையில் நகராட்சி மன்றத்தில் நடந்தது. ஆணையர் முருகேசன் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டம் தொடங்கியவுடன் திமுக உறுப்பினர்கள் ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் மத்திய அரசை கண்டிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்தனர். இதற்கு அதிமுக உறுப்பினர் பாஸ்கர் இலங்கை பிரச்சனைக்கு திமுக தலைவர் கருணாநிதி தான் காரணம். தற்போது கருணாநிதி நாடகம் ஆடுகிறார் என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் கூச்சல் குழப்பம் செய்தனர்.
இதனையடுத்து அதிமுக உறுப்பினர்களுக்கும் திமுக உறுப்பினர்களுக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டது. இதில் மைக் உடைக்கப்பட்டது. இதனையடுத்து இருதரப்பினரையும் தலைவர் சமாதனப்படுத்தி இருக்கைகளில் அமர செய்தார்.
இதன் பின்னர் தலைவர் அப்துல் ரகுமான் வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் மக்கள் நலத்திட்டப் பணிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் மக்களுக்கு பட்டை நாமம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி திமுக உறுப்பினர்கள் மன்றத்திலிருந்து வெளி நடப்பு செய்தனர்.
இதன் பிறகு கூட்டம் தொடர்ந்து நடந்தது. கூட்டத்தில் புதிய பேருந்து நிலைய விரிவாக்கம், புதுக்கோட்டை நூற்றாண்டு விழாவிற்காக அரசு அளித்துள்ள 50 கோடி ருபாய் சிறப்பு நிதியிலிருந்து நூற்றாண்டு விழா நினைவு தூண் அமைப்பது உள்ளிடட 60 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications