நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகளை மார்ச் 31க்குள் மூட ஹைகோர்ட் உத்தரவு

டாஸ்மாக் நிர்வாகம் கேட்ட 6 மாத அவகாசத்திற்கு உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. இதனையடுத்து நெடுஞ்சாலைகளில் உள்ள 504 கடைகளை 2 நாளில் மூட வேண்டிய கட்டாயம் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது.
மது அருந்திவிட்டு, வாகனங்கள் ஓட்டுவதால் நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் அதிகம் ஏற்படு கின்றன. இதை தடுப்பதற்காக நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை வருகிற 31ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து பார் உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். அது தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சவுண்டையா சார்பாக வக்கீல் முத்துராஜ் உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி பால்வசந்தகுமார் ஆகியோர் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
டாஸ்மாக் நிறுவனம் சார்பாக ஆஜரான அட்வகேட் ஜெனரல் சோமயாஜி, ‘நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடை களை மூட ஏற்கனவே நடவடிக்கை எடுத்து விட்டோம். 75 கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு விட்டன. 335 கடைகளுக்கு மாற்று இடங்களும் தேர்வு செய்து விட்டோம். மீதமுள்ள 94 கடைகளுக்கு மாற்று இடம் தேடி வருகிறோம். இதற்கு 6 மாதம் அவகாசம் வேண்டும்'' என்றார்.
டாஸ்மாக் கடை எதிர்ப்பாளர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று கேட்டுக்கொண்டனர்.
இதை ஏற்ற நீதிபதிகள், ‘ஏற்கனவே இதுபோன்ற மனுவை தள்ளுபடி செய்திருக்கிறோம். இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது. டாஸ்மாக் கடை களை மூட அவகாசம் தர முடியாது' என்று கூறினர். இந்த உத்தரவை அடுத்து நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகளை இன்னும் இரண்டே நாளில் மூட வேண்டிய நெருக்கடி தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications