குடும்பம் நடத்த வர மறுத்தார் மனைவி.. கோபத்தில் மாமனாரை வெட்டிக் கொன்றார் கணவர்
சென்னை: குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் கோபமடைந்த கணவர், தனது மாமனாரை வெட்டிக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை வீரராகவன் தெருவை சேர்ந்தவர் கபார் (48). இவர் ஒரு சமையல் கான்ட்ராக்டர். இவருக்கு லைலா என்ற மனைவி உள்ளார். இந்தத் தம்பதிக்கு பர்வீன், ஷகீலா என இரு மகள்களும், ஷேக் என்ற மகனும் உள்ளனர்.
பர்வீன் ஒரு மேடைக்கச்சேரி பாடகி ஆவார். கடந்த 2 வருடத்திற்கு முன்பு கோவையைச் சேர்ந்த தனஞ்செயன் என்பவரை காதலித்து மணந்தார். இந்த நிலையில் செப்டம்பர் மாதம் தம்பதிக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கோபித்துக் கொண்டு தாய் வீடு வந்து விட்டார் பர்வீன்.
அதன் பிறகு மனம் திருந்திய தனஞ்செயன் பலமுறை பர்வீனை வந்து குடும்பம் நடத்த வருமாறு கூப்பிட்டார். ஆனால் வர மறுத்து விட்டார் பர்வீன். இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனஞ்செயன் பர்வீன் வீட்டுக்கு வந்தார். அப்போது ஏற்பட்ட தகராறில், பர்வீனின் தந்தை கபாரை கழுத்தில் வெட்டி விட்டார் தனஞ்செயன். இதில் படுகாயமடைந்த கபார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு குணமடைந்தார்.
தனஞ்செயன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். கடந்த ஜனவரியில் ஜாமீனில் விடுதலையானார்.
இந்த நிலையில் நேற்று 2 பேரை கூப்பிட்டுக் கொண்டு பர்வீனி் வீட்டுக்கு வந்தார் தனஞ்செயன். வீட்டுக்கு வெளியே வந்து நின்று கொண்டு மனைவியை ஆபாசமாக திட்டி சத்தம் போட்டுள்ளார். அதைக் கேட்டு வெளியே வந்த கபார், மருமகனை கடுமையாக எச்சரித்தார்.
இதையடுத்து தனஞ்செயனுடன் வந்தவர்கள் சரமாரியாக கபாரை அரிவாளால் வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தனஞ்செயன் உள்ளிட்ட 3 பேரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications