வரதட்சணை புகார்: தலைமறைவாக இருந்த ஒடிஷா முன்னாள் அமைச்சர் மனைவியுடன் கைது!
ஹெளரா/பாலாசோர்: வரதட்சணை புகாரில் மேற்கு வங்க மாநிலத்தில் தலைமறைவாக இருந்த ஒடிஷா முன்னாள் அமைச்சர் ரகுநாத் மொகந்தி மனைவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒடிசா மாநில சட்ட அமைச்சராக இருந்தவர் ரகுநாத் மொகந்தி. அவரது மருமகள் பார்ஷா சோனி மொகந்தி பாலாசோர் போலீஸ் நிலையத்தில் கடந்த ஆண்டு வரதட்சணை புகார் கொடுத்தார் அதில் மாமனார் ரகுநாத் மொகந்தியும் அவரது மனைவியும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகக் கூறியிருந்தார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்ய ரகுநாத் மொகந்தி பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர் ரகுநாத் மொகந்தியையும் அவரது மனைவியையும் போலீசார் கைது செய்ய தேடிவந்ததால் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் ஒடிஷா உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இம்மனு கடந்த வாரம் தள்ளுபடியானது.இந்நிலையில் இருவரும் மேற்கு வங்க மாநிலம் ஹெளராவில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து இன்று காலை அவர் பதுங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்த போலீசார் இருவரையும் கைது செய்து ஒடிஷாவின் பாலாசோர் கொண்டு வந்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications