தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்!
தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு டிக்கெட் வழங்க ஷிப்ட் முறையில் ஊழியர்கள் பணிசெய்வது வழக்கம் . அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த ஊழியர் 9 மணிக்கு இருக்கைக்கு வந்தார். அவரது பணி நேரம் இரவு 9 முதல் மறுநாள் காலை 7 மணி வரை ஆகும்
முதல் ரயில்:
இரவு 12 மணி வரை ரயில்சேவை உண்டு. பின்னர் அதிகாலை முதல் ரயில் 4 மணிக்கு தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கும், 4.05 மணிக்கு செங்கல்பட்டுக்கும் புறப்படும். அதற்காக கவுன்டர் 3.30 மணிக்கு திறக்கப்பட வேண்டும்.
பயணிகள் அவதி:
நேற்று அதிகாலை 3.40 மணியளவில் டிக்கெட் வாங்க 50க்கும் மேற்பட்ட பயணிகள் கவுன்டரில் காத்திருந்தனர். நீண்ட நேரமாகியும் கவுன்டர் திறக்கப்படவில்லை. குரல் கொடுத்து பார்த்தனர். உள்ளே தூங்கி கொண்டிருந்த ஊழியர் எழுந்திருக்கவேயில்லை.
புகார்:
ஸ்டேஷன் மாஸ்டரிடம் சென்று சிலர் இதுகுறித்து புகார் செய்தனர். தகவலறிந்து தாம்பரம் ரயில்வே போலீசார் அங்கு வந்தனர். அதற்குள் பயணிகள் செல்ல இருந்த மின்சார ரயில் சென்றுவிட்டது. அப்போதும் கவுன்டர் திறக்கப்படவில்லை.
தூங்கிய ஊழியர்:
போலீசார் அறை கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். ஊழியர் தூங்கி கொண்டிருந்தார். அவரை போலீ சார் எழுப்பி எச்சரித்தனர். சரியான நேரத்தில் டிக்கெட் கொடுக்கப்படாததால், முதல் ரயிலில் செல்லவேண்டிய பயணிகள் போகமுடியாமல் சூழ்நிலை ஏற்பட்டது. அதற்கு பிறகே அவர் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார்.
புகார் புத்தகம்:
கோபத்தோடு டிக்கெட் பெற்று அடுத்த ரயிலில் பயணிகள் சென்றனர். இதுதொடர்பாக ரயில் நிலையத்தில் உள்ள புகார் புத்தகத்தில் பலர் கண்டனம் தெரிவித்து எழுதி சென்றனர்.