திருப்பதியில் இரவு நேர வி.ஐ.பி. தரிசனம் ரத்தாகிறது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. கடந்த 3 நாட்களாக தொடர் அரசு விடுமுறை என்பதால் லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர். மேலும் வி.ஐ.பி.க்களும் குவிந்ததால் சாதாரண பக்தர்கள் தரிசனம் செய்ய மணிக்கணக்கில் வரிசையில் காத்து கிடந்தனர்.
இதனால் அவர்கள் கோவில் ஊழியர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பக்தர்களை சமாளிப்பதில் தேவஸ்தானம் படாதபாடுபட்டது. நேற்று காலை முதல் இரவு வரை 75 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இன்றும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டத்தை சமாளித்து தரிசனத்தை துரிதப்படுத்துவது குறித்து திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழுவினர் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் இரவு நேரம் வி.ஐ.பி.க்கள் தரிசனத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. வி.ஐ.பி.க்களை காலை மட்டும் தரிசனத்துக்கு அனுமதிப்பது என்றும் வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் இரவு நேர தரிசனத்தை ரத்து செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
சாதாரண பக்தர்களுக்கு தரிசனத்துக்கு 3 வினாடி ஆகிறது என்றால் வி.ஐ.பி.க்களுக்கு 3 நிமிடம் ஆகிறது. அதோடு இரவில் தரிசனம் செய்யும் வி.ஐ.பி.க்கள் மறுநாள் காலையில் தரிசனத்துக்கு வருகிறார்கள். இதனால் சாதாரண பக்தர்கள் தரிசனத்தை தடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
புதிய நடைமுறை அமுல் படுத்தப்பட்டால் தினமும் கூடுதலாக 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க முடியும் என்று கூட்டத்தில் கருத்து கூறப்பட்டது. எனவே அடுத்த அறங்காவலர் குழு கூட்டத்தில் இந்த ஆலோசனை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு அமுல் படுத்தப்படும் என்று அறங்காவலர் குழு தலைவர் பாபுராஜு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications