எதியூரப்பா கட்சியில் பெருமாள் + நர்ஸுக்கு 'கிஸ்' கொடுத்த ரேணுகாச்சாரியா!!

ஷெட்டர் அமைச்சரவையில் எக்ஸைஸ் துறை அமைச்சராக இருந்து வந்தவர் ரேணுகாச்சார்யா. சமீபத்தில் அவர் முன்னாள் முதல்வர் சதானந்த கெளடா குறித்து பல்வேறு புகார்களை சுமத்தினார். இதையடுத்து அவரை பாஜக மேலிடம் கட்சியை விட்டு தூக்கியது.
தூக்கப்பட்ட ரேணுகாச்சார்யா அதே வேகத்தில் எதியூரப்பாவைப் பார்த்து அவரது கட்சியில் சேர்ந்து கொண்டார். வருகிற சட்டசபைத் தேர்தலில் அவர் ஹொன்னாலி தொகுதியிலிருந்து போட்டியிடுவார் என்று எதியூரப்பா உடனடியாக அறிவித்தார்.
நர்ஸுக்கு உம்மா கொடுத்தவர்
முன்னதாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர், ரேணுகாச்சாரியா. நர்ஸ் ஜெயலட்சுமி என்பவருடன் நெருங்கிப் பழகிய அவர் மீது சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலட்சுமி பரபரப்பு புகார்களைக் கொடுத்தார். மேலும் தானும், ரேணுகாச்சாரியாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதேபோல எதியூரப்பாவுக்கு எதிராகவும் ஒரு காலத்தில் போர்க்கொடி உயர்த்தியவர்தான் ரேணுகாச்சாரியா. மேலும் எதியூரப்பாவின் நெருக்கமான தலைவியான ஷோபா கரண்டலேஜவுக்கு எதிராகவும் செயல்பட்டவர். ஆனால் அரசியல் ஆதாயத்திற்காக இதையெல்லாம் மறந்து விட்டு தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளார் எதியூரப்பா என்பது குறிப்பிடத்தக்கது.
சிவாஜி நகரில் பெருமாள்...!
இதற்கிடையே, சட்டசபைத் தேர்தலுக்கான 2வது வேட்பாளர் பட்டியலை கர்நாடக ஜனதாக் கட்சி வெளியிட்டுள்ளது.
இதில் முக்கிய வேட்பாளர் ஐ.ஆர்.பெருமாள். இவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவரும் கூட ஊழல் புகாரில் சிக்கியவர்தான். 2002ம் ஆண்டு இவர் மைசூர் மினரல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தபோது வீட்டில் லோகாயுக்தா அதிகாரிகள் ரெய்டு நடத்தி ரூ. 1.22 கோடி மதிப்பிலான சொத்துப் பத்திரங்களைக் கைப்பற்றினர்.
தற்போது பெருமாள் பதவியிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். எதியூரப்பா கட்சியில் இணைந்து செயல்படுகிறார். தமிழர்களின் வாக்குகளைக் கவரும் வகையில் பெருமாளுக்கு சீட் கொடுத்துள்ளார் எதியூரப்பா என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications