தூத்துக்குடி அருகே அதிமுக செயலாளர் வெட்டிக் கொலை
தூத்துக்குடி: எப்போதும்வென்றான் அருகே அதிமுக செயலாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் அப்பாசாமி என்ற பக்கிராஜ். காட்டுநாயக்கன்ட்டி அதிமுக கிளை செயலாளர். அவர் சொந்தமாக டிராக்டர் வைத்து தண்ணீர் சப்ளை செய்து வந்தார். கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி தேர்தல் முன்விரோதம் மற்றும் கோவில் கொடை விழா பிரச்சனையில் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ஐடிஐ மாணவரான குருசாமி என்பவர் கொலையில் கைதான அப்பாசாமி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். இதன் பொருட்டு கடந்த ஜனவரி 17ம் தேதி முதல் நெல்லை சந்திப்பில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.
எப்போதும்வென்றான் அருகே உள்ள வே தளவாய்புரத்திற்கு நேற்று மாலை அப்பாசாமிக்கு சொந்தமான டிராக்டரில் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. வழி காட்டுவதற்காக அவர் டிராக்டருக்கு முன்னால் பைக்கில் சென்று கொண்டிருந்தார். வே தளவாய்புரம் அருகே சென்றபோது அங்கு வந்த மர்ம கும்பல் அவரை சராமரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது. டிராக்டருக்கும், கொலை நடந்த இடத்துக்கும் 500 அடி தூரம் இருந்ததால் டிராக்டர் டிரைவருக்கு வெட்டியவர்கள் யார் என்ற அடையாளம் தெரியவில்லை.