ஸ்டெர்லைட் ஆலைக்கு தாமிரதாது ஏற்றி வந்த கப்பல் தூத்துக்குடியில் நிறுத்தி வைப்பு
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு வியட்னாமிலிருந்து தாமிரத்தாது ஏற்றி வந்த கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுபோல் இன்று மதியம் மற்றொரு கப்பலும் தாமிரத் தாதுவுடன் தூத்துக்குடிக்கு வந்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து மார்ச் 23ம் தேதி அதிகாலை வெளியேறிய கந்தக டை ஆக்சைடு நச்சு புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டதோடு பொதுமக்களும் சிரமத்திற்குள்ளாகினர்.
இதையடுத்து ஆலையை மூடக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மீனவர் கூட்டமைப்புகள் போராட்டம் நடத்தியதால் கடந்த 30ம் தேதி ஆலையை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. மேலும் ஆலைக்கான குடிநீர், மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. பட்நாயக் தலைமையிலான பெஞ்ச் நேற்று அளித்த தீர்ப்பில் சென்னை ஐகோர்ட் 2010ம் ஆண்டு செப்.28ம் தேதி அளித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுவதாக கூறியுள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக தூத்துக்குடி கலெக்டரிடம் ஸ்டெர்லைட் நிர்வாகம் ரூ.100 கோடி டெபாசிட் தொகையாக 3 மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும், இந்த தொகையிலிருந்து கிடைக்கும் வட்டியை பயன்படுத்தி சுற்றுச்சூழல் மாசுபடாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
அதே சமயத்தில் நச்சுப்புகை வெளியேறியதால் ஆலையை மூடும்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவை இந்த தீர்ப்பு கட்டுப்படுத்தாது என்று பெஞ்ச் தெரிவித்துள்ளது. இதனால் ஆலை எப்போது திறக்கப்படும் என்பது தெளிவாகவில்லை.
தூத்துக்குடியில் கப்பல் நிறுத்தம்
இந்நிலையில் வியட்னாமிலிருந்து 10 ஆயிரத்து 502 டன் தாமிரத்தாதுவை ஏற்றிக் கொண்டு எம்.வி., மேக்னட் என்ற கப்பல் நேற்று முன்தினம் அதிகாலை 12.30 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தது. அன்று காலை 7.45 மணிக்கு தாதுவை கப்பலில் இருந்து இறக்கும் பணி தொடங்கிய நிலையில் மதியம் 12 மணி அளவில் ஸ்டெர்லைட் நிறுவனத்திலிருந்து வந்த உத்தரவையடுத்து தாமிரத் தாதுவை இறக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனால் 1350 டன் தாமிரத்தாது இறக்கப்பட்ட நிலையில் மீதியுள்ள 9 ஆயிரத்து 152 டன்களுடன் துறைமுகத்தின் 4வது தளத்தில் அந்தக் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.
இரண்டாவது கப்பல் வந்தது
3 நாட்களாக இக் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதால் மற்ற கப்பல்கள் இங்கு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோல் ஸ்டெர்லைட்டுக்கு தாமிரத்தாதுவை ஏற்றிக் கொண்டு மற்றொரு கப்பலும் இன்று மதியம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications