குழந்தைகளை தத்தெடுக்கும் சட்டங்கள் தளர்த்தப் பட்டால் தவறுகள் அதிகரிக்கும்: சட்டசபையில் வளர்மதி
சட்டசபையில் இன்று சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில் அழகாபுரம் மோகன்ராஜ் (தே.மு.தி.க.) பேசுகையில் ‘‘சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள், சமையலர்கள் 30 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். மேலும், குழந்தைகளை தத்து எடுப்பதில் விதிமுறைகளை எளிமைப் படுத்த வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பா.வளர்மதி, 'குழந்தைகளை தத்தெடுப்பதற்கான விதிமுறைகள் எளிதாக இருந்தால் அது தவறு நடைபெற வழிவகுத்துவிடும். தத்து கொடுக்கும் குழந்தைகள் ஆதரவற்ற குழந்தைகள், தொட்டில் குழந்தை திட்டத்தில் விடப்பட்ட குழந்தைகள் ஆகும்.
உலகளவில் போற்றப்படும் முதல்-அமைச்சர் கொண்டு வந்த இந்த திட்டம் மற்ற மாநிலங்களில் பின்பற்றப்படுகிறது. குழந்தைகளை தத்து எடுப்பதில் விதிமுறைகள் கடுமையாக இருந்தால்தான் அந்த குழந்தைகள் மீண்டும் தெருவீதிக்கு வரமாட்டார்கள். தவறு நடக்ககூடாது என்பதற்காகத்தான் விதிகள் கடுமையாக உள்ளன.
பெண்கள் மீதான வன்கொடுமை, பாலியல் கொடுமை போன்றவற்றால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முதல்-அமைச்சர் 13 அம்சம் கொண்ட தண்டனைகள் வழங்ககூடிய வழிமுறைகளை கொண்டு வந்து இருக்கிறார்.
மகளிர் காவல் நிலையம், மகளிர் ஆணையம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எந்த கொடுமையும் நிகழக்கூடாது என்பதில் முதல்-அமைச்சர் ஆழமான உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறார்.
குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது. போலீஸ் உதவியுடன் இருதரப்பையும் அழைத்துப் பேசி அதில் தீர்வு ஏற்படாவிட்டால் தண்டனை பெற்றுத்தரப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் திருக்கோவில்களில் சாமி தரிசனம் செய்ய தேவையான வசதிகள் செய்யும்படி இந்து அறநிலையத்துறைக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அவர்களை கருவறை சென்று சாமி தரிசனம் செய்யவும் ஆலயங்களில் பிரகாரங்களில் 3 சக்கர சைக்கிள்களில் அழைத்துச் செல்லவும் வசதிகள் செய்து தரும்படி அறநிலையத்துறை ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்' என அவர் கூறினார்.