ஈ.வி.கே.எஸ் மிரட்டலுக்கும் எஸ்.ஆர்.எம் பாரிவேந்தரிடம் சிபிஐ விசாரணைக்கும் என்ன தொடர்பு?
சென்னை: இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களின் நிறுவனருமான பாரிவேந்தர், மருத்துவ படிப்பிற்காக லட்சக்கணக்கில் நன்கொடை வாங்கினார் என்று குற்றம் சாட்டப்பட்டு சிபிஐ விசாரணையில் சிக்கியுள்ளார்.
ஈழப் பிரச்சனை பற்றியும், மாணவர்கள் போராட்டம் பற்றியும் புதிய தலைமுறை நிகழ்ச்சியில் கடந்த மார்ச் 27ம் தேதி 'நேர்பட' நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், மாணவர் போராட்டத்தை புதிய தலைமுறை தொலைக்காட்சி தூண்டுவதாக குற்றம் சாட்டினார்.
ஈழம் பற்றி பேசுபவர்கள் எல்லாம் சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அந்த நிகழ்ச்சியிலேயே தெரிவித்துவிட்டு நிகழ்ச்சியில் இருந்தும் பாதியிலேயே வெளியேறினார்.
இந்த சம்பவம் நடந்து மறுநாளே சிபிஐ வளையத்திற்குள் வந்தார் புதிய தலைமுறை குழுமத்தின் தலைவர் பாரிவேந்தர். அவருக்கும், அவரது மகன் ரவி பச்சமுத்துவிற்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியது. மருத்துவ கல்லூரி படிப்பிற்கு நன்கொடை வாங்கிய வழக்கு தொடர்பாக இந்த விசாரணையாம்.
சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ஜம்பாலா என்பவரின் வீட்டில் சில நாட்களுக்கு முன்னர் சிபிஐ ரெய்டு நடத்தியது. அந்த சோதனையில் ஜம்பாலாவின் வரவு செலவு டைரியில், தனது மகள் மானஷாவை மருத்துவப் படிப்பில் சேர்ப்பதற்கு நன்கொடை கொடுத்த வகையில் 40 லட்சம் என்று ஒரு துண்டுச் சீட்டில் குறிப்பிட்டிருந்தாராம்.
எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்துள்ளார் மானஷா. இதையடுத்து, பாரிவேந்தரும் எஸ்.ஆர்.எம். கல்லூரியின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் அவருடைய மகன் ரவி பச்சமுத்துவும் சிபிஐ வளையத்திற்குள் வந்தனர். இதையடுத்து முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவையும் தாக்கல் செய்தனர்.
பாரிவேந்தரின் மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கும் அவரது மகனுக்கும் முன்ஜாமின் வழங்கியது. அதே நேரத்தில் சிபிஐ விசாரணைக்குக் கண்டிப்பாக நேரில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டது.
இதனையடுத்து கடந்த திங்கள்கிழமை சென்னை சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு பாரிவேந்தரும் அவரது மகன் ரவி பச்சமுத்துவும் காலை 9.20 மணிக்கு வந்தனர். மூன்றரை மணி நேரம் நடந்த விசாரணை நடைபெற்றது. மாணவர் சேர்க்கையின் போது வசூலிக்கும் நன்கொடைகள் பற்றிதான் கேள்விகள் கேட்கப்பட்டதாம்.
ஆனால், ஒரு டைரியில் எழுதி வைக்கப்பட்ட ஒரு வெறும் குறிப்பை வைத்துக் கொண்டு சிபிஐ விசாரணைக்கு வந்தது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே ஐ.மு.கூட்டணியில் இருந்து வெளியேறிய மறுநாளே திமுகவினர் சி.பி.ஐ சோதனையை சந்தித்தனர். அதேபோல் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசிவிட்டுச் சென்ற மறுநாளே சி.பி.ஐ சம்மன் அனுப்பியதால்தான் இதனை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.