அமெரிக்காவில் ஆந்திரா சாப்ட்வேர் என்ஜினியர் திடீர் மாயம்!
நியூயார்க்: அமெரிக்காவில் டி.சி.எஸ். நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் பி.வி. சரத்குமார் திடீரென காணாமல் போயுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது..
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி.வி.சரத்குமார், அமெரிக்காவில் 7 ஆண்டுகளாக தங்கியிருக்கிறார். அங்கு. டி.சி.எஸ். நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சரத்குமார், மனைவி மஞ்சுளாவுடன் சிகாகோ நகரில் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு தமது உறவினர்களை நயாகராவுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கிருந்து திரும்பி வரும் வழியில், வாஷிங்டன் டி.சி. பகுதியில் காபி சாப்பிடுவதற்காக பேருந்தை நிறுத்திவிட்டு கிளம்பும்போது அவர் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சரத்குமாரின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் 3 நாட்கள் ஆகியும் அவரைப் பற்றிய எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.