சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக நிர்வாக அதிகாரியாக ஷிவ்தாஸ்மீனா நியமனம்!
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளராக உள்ள ஷிவ்தாஸ் மீனாவை நிர்வாக அதிகாரியாக தமிழக அரசு நியமித்துள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிதிச் சிக்கல் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்கும் வரை தாற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ள நிர்வாக அதிகாரி பொறுப்பில் ஷிவ்தாஸ் மீனா தொடர்வார். ஓராண்டு காலம் அல்லது தேவைப்படும் காலம் வரையில் அவர் அந்தப் பொறுப்பை வகிப்பார். இந்த உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது. அதே நேரத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் பொறுப்புக்கு வேறு யாரும் நியமிக்கப்படவில்லை.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஷிவ்தாஸ் மீனாவுக்கு அப் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நிதி உள்பட அனைத்து முடிவுகளையும் இனி துணைவேந்தரோ அல்லது பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய உயர் அதிகாரிகள் குழுவோ எடுக்க முடியாது. தமிழக அரசு நியமித்துள்ள நிர்வாக அதிகாரியான ஷிவ்தாஸ் மீனாதான் அனைத்து முடிவுகளையும் எடுக்க முடியும்.தமிழக அரசின் நியமன அறிவிப்பைத் தொடர்ந்து ஷிவ்தாஸ்மீனா நேற்று மாலை அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.