சஞ்சய் தத் பொதுமன்னிப்பு விவகாரம்: மகாராஷ்டிரா ஆளுநரிடம் 60 மனுக்கள்!
மும்பை: மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு கருணை காட்டக் கோரியும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 60 மனுக்கள் ஆளுநரிடம் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
1993ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் நடிகர் சஞ்சய் தத்தும் சிக்கினார். அவர் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததால் 18 மாதம் சிறைத்தண்டனை அனுபவித்து ஜாமீனில் விடுதலையானார். அண்மையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு அளித்த போது சஞ்சய்தத்துக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையை விதித்தது.
அப்போது இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜூ, நடிகர் சஞ்சய் தத்துக்கு கருணை காட்ட வேண்டும் என்றும் அவருக்கு பொதுமன்னிப்பு கொடுக்க வேண்டும் என்றும் குரல் எழுப்பினார். அவரைத் தொடர்ந்து ரஜினிகாந்த், ஜெயாபச்சன் உள்ளிட்ட பலரும் சஞ்சய்தத்துக்கு பொதுமன்னிப்பு வழங்க வலியுறுத்தினர். அதே நேரத்தில் சஞ்சய்தத் தண்டனையை அனுபவித்தாக வேண்டும் என்றும் மற்றொரு தரப்பு வலியுறுத்தியது.
இது தொடர்பாக மகாராஷ்டிரா ஆளுநர் கே. சங்கரநாராயணனுக்கு மொத்தம் 60 மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் சஞ்சய்தத்துக்கு பொதுமன்னிப்பு கோரும் மனுக்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மனுக்களும் அடங்கும். சமூக செயற்பாட்டாளர் அபாசிங் ஆளுநருக்கு அனுப்பியுள்ள மனுவில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் சஞ்சய்தத்துக்கு பொதுமன்னிப்பு கொடுத்தால் அது பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
சஞ்சய்தத்துக்கு ஆதரவாக சினிமா ஊழியர்கள் அமைப்புகளும் மனு கொடுத்திருக்கின்றனர். இந்த மனுக்கள் அனைத்தும் உள்துறை அமைச்சக கூடுதல் செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. உள்துறை அமைச்சகம் இதன் மீது முடிவெடுத்து அறிவிக்கும்.












Click it and Unblock the Notifications