புதுச்சேரியிலும் 'சரக்கு கடைகளை' மூடுங்க! - திருமா
புதுவை: புதுச்சேரியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் இழுத்து மூடாவிட்டால் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
புதுவை மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் ராம் இண்டர்நேஷனல் ஓட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதுவை மாநில அமைப்பு செயலாளர் பாவாணன் தலைமை தாங்கினார்.
பொது செயலாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் நிருபர்களைச் சந்தித்த போது, "ஈழத் தமிழர்களின் நலன்களை பாதுகாத்திடவும், தனி தமிழ் ஈழத்திற்கு ஆதரவு திரட்ட தொடர்ந்து போராட்டங்கள் நடத்தவும் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களை சார்ந்த மக்கள் ஒன்றாக திரண்டு ஒற்றுமையாக போராட வேண்டும்.
சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டப்படி 25 சதவீதம் ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
புதுவை அரசு தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
மதுக்கடைகளை மூடவேண்டும்
புதுச்சேரியில் உள்ள மதுபான கடைகளால் இளைஞர்கள் குடிபோதைக்கு அடிமையாகி பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் அவர்களது குடும்பம் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே புதுவையில் உள்ள மதுபான கடைகளை மூட வேண்டும். மதுபான கடைகளை மூடாவிட்டால் பல்வேறு போராட்டங்கள் வெடிக்கும்.
தமிழகத்தின் பல பகுதிக்கும் கூட இங்கிருந்து கள்ளத்தனமாக மது போகிறது. அதையெல்லாம் தடுக்க அனைத்து மதுக்கடைகளையும் ஒழிக்க வேண்டும்," என்றார்.












Click it and Unblock the Notifications