கனிமவளத்துக்கு நவீன ஆயுதங்கள்:மாவோயிஸ்டுகளுடன் தாவூத் இப்ராஹிம் டீல்!
மாவோயிஸ்டுகள் ஒடிஷா, ஜார்க்கண்ட், பீகார், சட்டீஸ்கர் ஆகிய கனிம வளம் மிக்க மாநிலங்களில் வலுவான நிலை கொண்டிருக்கின்றனர். இவர்களது கட்டுப்பாட்டில்தான் கனிமவளம் மிக்க மலைகள் இருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் தீவிரவாத செயல்களுக்கு உதவி வரும் நிழல் உலக தாதா வெளிநாடு ஒன்றில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது நேபாளத்தில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தாவூத்தும் அங்குதான் இருப்பதாக தெரிகிறது. கள்ள நோட்டுகள் மற்றும் ஆயுதக் கடத்தல்கள் நேபாளம் வழியாக தாவூத் கூட்டாளிகள் மூலம் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் நேபாள மாவோயிஸ்ட் தலைவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட ஐ.எஸ்.ஐ.- தாவூத் கூட்டணி அவர்கள் மூலமாக 4 மாநிலங்களில் சட்டவிரோத சுரங்கங்கள் அமைத்து கனிம வளத்தை வெட்டி எடுக்க மாவோயிஸ்டுகளிடம் அனுமதி பெற்றிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கனிம வளங்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த 4 மாநிலங்களில் சட்டவிரோத சுரங்கங்கள் அனைத்தும் தாவூத் கூட்டாளிகள் வசமே இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கு பிரதி பலனாக மாவோயிஸ்டுகளுக்கு மிகக் குறைந்த விலையில் நவீரக ஆயுதங்களை தாவூத் அனுப்பி வருவதாகவும் உளவுத்துறைக்கு தெரியவந்துள்ளது. துப்பாக்கிகள், கண்ணிவெடிகள் மட்டுமின்றி மிக நவீன ரக ஆயுதங்களும் மாவோயிஸ்டுகள் வசமாகி இருக்கிறதாம். மேலும் இந்த சட்டவிரோத சுரங்கம் மூலமான கனிமவள விற்பனையில் ஒரு பகுதி பணமும் மாவோயிஸ்டுகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறதாம்.