மாவோயிஸ்ட் கைது விவகாரம்…கோவையில் இருந்து வெளியேறும் வட இந்திய தொழிலாளர்கள்
கோவை: மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் கோவையில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, வட இந்திய தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை தரும்படி தொழில் நிறுவனங்களுக்கு காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஏராளமான வட இந்திய தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். கோவையில் தொழிற்சாலைகள், கட்டுமான பணிகள், உணவகங்களில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பணியாளர்கள்தான் அதிகம்.
அதேபோல் திருப்பூர் மாவட்டத்திலும் பனியன் தொழிற்சாலைகளிலும், பின்னலாடை நிறுவனங்களிலும் ஏராளமான வட இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தனியார் நிறுவனம் ஒன்றில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த ஷ்யாம் சரண் என்பவரை போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர். அவர் மாவோயிஸ்ட் என்பதும் 24 போலீசார் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அனைத்து தொழிற்சாலைகளும், வட மாநில தொழிலாளர்கள் குறித்த விவரங்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என கோவை மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து தொழிலாளர்களும், இடைத்தரகர்கள் மூலம் வேலைகளுக்காக அழைத்து வரப்படுவதால்,அவர்கள் குறித்த விவரங்கள் தொழில் நிறுவனங்களிடம் இல்லை. அதனால், அவர்களின் முகவரி உள்ளிட்டவற்றை கண்டறிவதில் சிக்கல்கள் உள்ளன.
இதனால் அச்சமடைந்துள்ள வெளி மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். கோவையில் அமைப்பு சாரா தொழில்களில் மட்டும் சுமார் 40 சதவிகிதம் பேர் பணியாற்றுவதாக தெரிகிறது. வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்வதால் வேலைக்கு ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில் நிறுவனங்கள் கவலை தெரிவிக்கின்றன.
அதேபோல் திருப்பூரில் இருந்தும் வட இந்தியர்கள் வெளியேறத் தொடங்கினால் ஆர்டர்களை முடிப்பதில் பெரும் சிக்கல்கள் ஏற்படும் என்று பின்னலாடை நிறுவன உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே வெளி மாநிலத்தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை திரட்டும் அதேவேளையில் அவர்கள் பீதியடையாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொழில் நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன.












Click it and Unblock the Notifications