மாரடைப்பில் வேன் ஓட்டுனர் மரணம்: தப்பிய பள்ளி குழந்தைகள்
ஈரோடு: பள்ளிக்குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வேனை ஓட்டிச் சென்ற டிரைவர் மாரடைப்பால் பலியானார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம்: கோபி புதுப்பாளையம் படையாச்சி மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஜான், வயது-60. இவர் கோபி கரட்டூர் பாரதி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார்.
நேற்று மாலை 3.30 மணி அளவில், பள்ளி குழந்தைகள், 15 பேரை ஏற்றிக்கொண்டு, மொடச்சூர் அன்பு நகர் வழியாக வேனை ஒட்டிக்கொண்டு சென்றார்.
அப்போது, திடீரென ஜானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்தது. உடனடியாக பள்ளி மாணவர்கள் இருந்த வேனை சாலை ஓரமாக நிறுத்தினார். சில விநாடியில் மயங்கி அவர் உட்காந்திருந்த இருக்கையிலேயே படுத்துவிட்டார். அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் நிலைமையை உணர்ந்து உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அவர் சிகிச்சைக்கு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக என மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால், டிரைவர் ஜான் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த துயர சம்பவத்தில் வேன் மற்றும் அதில் பயனம் செய்துகொண்டிருந்த பள்ளி குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. உயிரை கொடுத்தும் குழந்தைகளை காப்பாற்றிய ஓட்டுனர் ஜானை பலரும் பாராட்டினார்கள்.