ஈரான் நிலநடுக்கத்தால் அதிர்ந்த அபுதாபி, துபாய், ஷார்ஜா
துபாய்: ஈரானில் நேற்று மதியம் ஏற்பட்ட நிலநடுக்கம் ஐக்கிய அரபு அமீரகத்திலும் உணரப்பட்டுள்ளது.
ஈரானில் நேற்று பிற்பகல் காகி என்ற நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1க பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர், 800 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து 5.4, 4.6, 4.8 மற்றும் 4.1 ஆகிய அளவில் அதிர்வுகள் ஏற்பட்டன.
ஈரானில் நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு அபுதாபி, துபாய், ஷார்ஜா மற்றம் அரேபிய வளகுடாவிலும் அதிர்வு உணரப்பட்டுள்ளது. அங்கு உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. நேற்று பிற்பகல் 3.50 மணிக்கு துபாய் மற்றும் அபுதாபியில் நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் பீதியடைந்த மக்கள் தெருக்களில் ஓடிவந்து நின்றனர்.
இது குறித்து துபாயில் பணிபுரியும் யூசுப் அக்லியா கூறுகையில், நான் எனது அலுவலகத்தின் 17வது மாடியில் இருந்தேன். அப்போது ஏதோ அதிர்வது போல இருந்தது. சக ஊழியர் ஒருவர் நிலநடுக்கம் என்று கூறினார். சுமார் 8 வினாடிகள் இந்த அதிர்வு நீடித்தது. இதையடுத்து அந்த கட்டிடத்தில் உள்ள பிற துறையைச் சேர்ந்த ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர் என்றார்.