உகாதி திருநாள்: திருமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
திருப்பதி: உகாதி வருடப்பிறப்பை ஒட்டி திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தெலுங்கு, கன்னட மக்களின் வருடப் பிறப்பான உகாதி இன்று ஆந்திரா, கர்நாடகாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த வருட பிறப்பையொட்டி ஆந்திர மாநிலம் திருமலையில் ஏழுமலையான் கோவில் விழாக்கோலம் பூண்டிருந்தது. மலர்களாலும், வண்ண மின் விளக்குகளாலும் கோவில் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. நேற்று முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டிருந்தனர். அதிகாலையில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது. அப்போது குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் வசதிக்காக திருப்பதியில் இருந்து திருமலைக்கு ஆந்திர அரசு போக்குவரத்து கழக சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. மாலையில் உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் சமேதராக மாட வீதிகளில் வலம் வருகிறார்.
25ல் சந்திர கிரகணம்
சித்திரை பவுர்ணமி தினமாக வரும் 25ம் தேதி சந்திர கிரகணம் என்பதால் அன்றைய தினம் கோயில் நடை மூடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, 25ம் தேதி பகல் பொழுதில், விஐபி தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. பொது தரிசனத்தில் வரும் பக்தர்களும், மாலை 5 மணிக்குள் சாமி தரிசனத்தை முடித்து வெளியேற்றப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுநாள் 26ம் தேதி அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, பிறகு கோவிலை தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்து முடிந்து சிறப்பு பூஜைகள் செய்யப்படும். பின்னர் தான் பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும்.