பாகிஸ்தானுக்கு அணு தொழில்நுட்பத்தை வழங்க முனவந்தார் இந்திரா - விக்கிலீக்ஸ்
டெல்லி: 1974ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டுக்கு அணு தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ள அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தயாராக இருந்தார் என்று அமெரிக்க தூதரக தகவல்களை மேற்கோள் காட்டி விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.
இந்தியா தொடர்பான குறிப்பாக, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி உள்ளிட்டோர் தொடர்பான பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ்.
இதுதொடர்பாக விக்கிலீக்ஸ் கூறியுள்ளதாவது...

இந்திராவின் பாகிஸ்தான் பாசம்
1974ம் ஆண்டு இந்தியா முதல் முறையாக அணு ஆயுதச் சோதனையை நடத்தியது. அதை அமைதிப் பணிகளுக்கான சோதனை என்றே இந்தியா வர்ணித்திருந்தது. அதன் பிறகு பாகிஸ்தானிடமும் அணு தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ள இந்திரா காந்தி முன்வந்தார்.

நாடாளுமன்றத்தில் அறிக்கை
முதல் அணு சோதனைக்குப் பின்னர் இந்திய நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தார் இந்திரா. அதில் பாகிஸ்தான் பிரதமர் ஜுல்பிகர் அலி புட்டோவுக்கு தான் எழுதிய கடிதம் குறித்து விளக்கியிருந்தார் இந்திரா.

புட்டோவுக்கு எழுதிய கடிதத்தில்..
நான் பாகிஸ்தான் பிரதமர் புட்டோவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த அணு சோதனை அமைதிப் பணிகளுக்கான சோதனையே என்பதை விளக்கியுள்ளேன். மேலும், இதேமாதிரியான ஆக்கப்பூர்வமான அணுப் பயன்பாட்டில் பாகிஸ்தானும் ஈடுபட விரும்பினால் அதற்கு இந்தியா உதவும், உரிய நிபந்தனைகளுக்குட்பட்ட அணு தொழில்நுட்பத்தை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளேன். நாடாளுமன்றத்தின் வாயிலாக இதை மீண்டும் உறுதிப்படுத்துகிறேன் என்று கூறியிருந்தார் இந்திரா.

மிகவும் அசாதாரணமான முடிவு..
இந்திரா காந்தியின் இந்த முடிவு மிகவும் அசாதாரணமானது. அதேசமயம் எதிர்காலத்தைக் கணக்கிட்டு அவர் எடுத்த தீர்க்கமான முடிவு என்று அமெரிக்க தூதரகம் தனது கடிதத்தில் தெரிவித்திருந்தது.

புட்டோவுக்கு வந்த சந்தேகம்
ஆனால் இந்திராவின் கடிதம் குறித்து பாகிஸ்தான் தரப்பில் சந்தேகம் போகவில்லை. காரணம், இந்தியாவின் அணு சோதனை பாகிஸ்தானை குறி வைத்து நடத்தப்பட்டது என்று அவர்கள் நினைத்ததே.

புட்டோ எழுதிய பதிலில்...
ஜுல்பிகர் அலி புட்டோ இந்திராவுக்கு எழுதிய பதில் கடிதத்தில், இந்தியா கடந்த காலங்களில் கொடுத்த பல உறுதிமொழிகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. எனவே உங்களது இந்த உத்தரவாதத்தை எப்படி நம்புவது, ஏற்பது என்று தெரியவில்லை. அணு சோதனை என்பதற்கும், அணு குண்டு போடுவதற்கும் நிறைய வித்தியாசம் இல்லை என்று நான் கருதுகிறேன் என்று கூறியிருந்தார் புட்டோ.

98ல் பதிலடி கொடுத்த பாகிஸ்தான்
இருப்பினும் இந்தியாவின் அணு சோதனைக்கு 1998ம் ஆண்டு முதல் முறையாக பதில் கொடுத்தது. அதற்கு 15 நாட்களுக்கு மு்ன்புதான் பொக்ரானில் இந்தியா தனது 2வது அணு ஆயுத சோதனையை நடத்தி முடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திரா காந்தியின் திட்டம்
பாகிஸ்தானுக்கு அணு தொழில்நுட்பத்தைத் தருவதாக இந்திரா காந்தி கூறியதில் பல திட்டங்கள் அடங்கியிருந்தன. அதாவது உலக நாடுகள் மத்தியில் இந்தியா மீதான மதிப்பை அது உயர்த்தும் என்பது அதில் ஒன்று. இன்னொன்று பாகிஸ்தானை இந்தியா எதிரியாக நினைக்கவில்லை என்பதை சர்வதேச சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டுவது.

இந்திரா எண்ணம் நிறைவேறவில்லை
ஆனால் இந்திராவின் எண்ணம் நிறைவேறவில்லை. இந்தியாவின் அணு ஆயுத சோதனைக்குப் பின்னர் இந்தியாவுக்கு என்எஸ்ஜி கூட்டமைப்பு தடை விதித்தது. இந்த தடைகளை இந்தியா கடந்த 2008ம் ஆண்டுதான், அமெரிக்காவுடன் சிவில் அணு சக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதன் மூலம் உடைத்தது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications