தாறுமாறாக கடன் வாங்கிய மனைவி... பிராந்தியில் பூச்சி மருந்து கொடுத்து கொலை செய்த கணவன்
நாமக்கல்: பலமுறை சொல்லியும் பெருமளவில் கடன் வாங்கி வந்த தனது மனைவியை திருத்த முடியாமல், அவருக்குப் பிராந்தியில் பூச்சி மருந்தைக் கலந்து கொடுத்துக் கொலை செய்து விட்டார் கணவர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை அடுத்த கண்டிப்புதூரை சேர்ந்தவர் ஜெயபால். 40 வயதான இவர் தறித் தொழிலாளி ஆவார். இவரது மனைவி பெயர் மல்லிகா. 35 வயதான மல்லிகாவுக்கு ஒரு பழக்கம் இருந்துள்ளது. அதாவது தன்னிடம் பணம் கேட்டு வருகிறவர்களுக்கு சொந்தமாக இவரே வட்டிக்குப் பணம் கடன் வாங்கிக் கொடுபப்பார். பின்னர் அதில் ஒரு கமிஷனும் எடுத்துக் கொள்வார்.
இது கெட்ட பழக்கம், வேண்டாம் விட்டு விடு என்று மல்லிகாவை அவரது கணவர் பலமுறை எச்சரித்துள்ளார். ஆனாலும் கேட்கவில்லை மல்லிகா. ஆனால் பணம் கடன் வாங்கிய பலர் சரியாக கட்டவில்லை. இதனால் மல்லிகாவுக்கு கடன் சுமை அதிகரிக்க ஆரம்பித்தது. இதை சமாளிக்க தனது கணவரிடம் வலியுறுத்தி அவரது தறிப் பட்டறையிலிருந்து அவ்வப்போது பெருமளவில் பணம் கடன் வாங்கி வரச் சொல்லி வந்துள்ளார். ஆனால் இதற்கு மறுத்து விட்டார் ஜெயபால்.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதையடுத்து மனைவி இருந்தால்தானே பிரச்சினை, ஒரேயடியாக கொன்று விடுவோம் என்ற விபரீதமான முடிவுக்கு வந்து விட்டார் ஜெயபால்.
இதையடுத்து பிராந்தி வாங்கி வந்த அவர் அதில் பூச்சி மருந்தைக் கலந்தார். பின்னர் வீட்டில் இருந்த மனைவியிடம் வலுக்கட்டாயமாக வாயில் விஷ பிராந்தியை ஊற்றினார். இதையடுத்து மல்லிகா மயங்கி விழுந்தார். அதன் பின்னர் மல்லிகாவை வீட்டுக்குள் வைத்துப் பூட்டி வைத்து விட்டு வேலைக்குப் போனார். பின்னர் மாலையில் திரும்பி வந்தார். அப்போது மல்லிகா உயிருக்குப் போராடிய நிலையில் இருந்தார்.
இன்னும் சாகவில்லையே என்று கோபத்துடன் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார் ஜெயபால். அந்த சமயத்தில் அங்கு மல்லிகாவின் தந்தை வந்துள்ளார். அவரிடம், மல்லிகா தூங்கிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார் ஜெயபால். ஆனால் மகள் அருகே போய் பார்த்தார் தந்தை. அப்போதுதான் மல்லிகா இறந்திருந்தது தெரிய வந்தது. இருப்பினும் மருமகன் மீது அவருக்குச் சந்தேகம் வரவில்லை.
ஆனால் துக்க வீட்டிற்கு வந்த மல்லிகாவின் உறவினர்கள் ஜெயபால் மீது சந்தேகமடைந்தனர். போலீஸில் இதைக் கூறினர். இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதில்தான் உண்மை தெரிய வந்தது. இதையடுத்து ஜெயபால் கைது செய்யப்பட்டார்.