காங்கிரஸ்தான் நாட்டின் மிகப்பெரும் மதவாதக்கட்சி - ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
ராய்ப்பூர்: காங்கிரஸ்தான் நாட்டின் மிகப்பெரும் மதவாதக்கட்சியாக உள்ளது என பாரதீய ஜனதா கட்சித்தலைவர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
சத்திஷ்கர் மாநில பாரதீய ஜனதா கட்சியின் புதிய தலைமையக கட்டிடத்தை திறந்து வைத்து ராஜ்நாத் சிங் பேசினார்.
அப்போது காங்கிரஸ் பற்றி ராஜ்நாத் சிங் கூறியதாவது, ‘நாட்டின் மிகப்பெரிய மதவாத கட்சியாக காங்கிரஸ்தான் விளங்குகிறது. கடந்த 50 வருடங்களுக்கு மேலாக காங்கிரஸ் நாட்டை ஆண்டு வந்து இருக்கிறது. பல்வேறு மதங்களும் சாதிகளும் நிறைந்த இந்த நாட்டை சகோதர ஒற்றுமையுடனும், பரஸ்பர புரிந்துணர்வுடனும் கொண்டு சென்று இருக்க வேண்டிய பொறுப்பு அந்த கட்சிக்கு இருக்கிறது.
ஒவ்வொரு முறையும், தேர்தல் வருகிறபோது, வாக்குகளை பெற இந்து, முஸ்லிம், கிறுஸ்து பிரச்சினைகளை காங்கிரஸ் கிளப்பி அரசியல் ஆதாயம் தேடுகிறது. ஏழைகள் மேம்பாடு, வேலைவாய்ப்பு பெருக்கம், பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தல் போன்ற காரியங்களில் காங்கிரஸ் ஒன்றும் செய்யவில்லை.
தேசிய ஜனநாயக ஆட்சியின் போது பொருட்களின் விலை நிலையாகவே இருந்தது' என அவர் தெரிவித்தார்.