இது ஜேபிசி அறிக்கை அல்ல... 'காங்கிரஸ் அறிக்கை': எதிர்க்கட்சிகள் தாக்கு!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஆ. ராசா மற்றும் வாஜ்யாப் அரசு மீதெல்லாம் குற்றம்சாட்டி விட்டு பிரதமர் மன்மோகன்சிங் மீது தவறே இல்லை என்று கூறும் அறிக்கையானது பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் அறிக்கை அல்ல.. காங்கிரஸ் கட்சியின் அறிக்கை என்று எதிர்க்கட்சிகள் சராமரியாக சாடியுள்ளன.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் ப சிதம்பரம் ஆகியோர் குற்றமற்றவர்கள். ஆனால் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் ரூ 40,080 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர் ஆ ராசாதான் பிரதமரை ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தவறாக வழி நடத்தினார் என்றும் குற்றம் சாட்டியுள்ளது. ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ரூ 1.76 லட்சம் கோடி நட்டம் என்ற சிஏஜி அறிக்கையை முட்டாள்தனமான ஒன்று எனவும் கூறியுள்ளது.
பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் இந்த அறிக்கையை நிராகரித்திருக்கும் எதிர்க்கட்சிகள், இது காங்கிரஸ் கட்சியின் அறிக்கையாகவே இருக்கிறது என்று சாடியிருக்கின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா கருத்து தெரிவிக்கையில், பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் அறிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம். இது காங்கிரஸ் கட்சியால் உருவாக்கப்பட்ட கதை என்றார். தாமும் ஜேபிசி உறுப்பினர் என்பதால் உண்மைக்கு மாறானவையே இதில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா, இது காங்கிரஸ் கட்சியின் அறிக்கையே தவிர.. பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் அறிக்கையே இல்லை என்றார். பாஜகவும் இந்த அறிக்கையை விமர்சித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications