டெல்லி சிறுமியைக் கற்பழித்த கொடூரன் கைது!
பீகார் மாநிலம் முசாபஃர்பூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில் இன்று அதிகாலை 2 மணி அளவில் அவன் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
25 வயதுள்ள மனோஜ்குமார் என்ற அந்த இளைஞருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்துள்ளது. அவரது மனைவி இரு தினங்களுக்கு முன்பு தனது தாய் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
டெல்லி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி, கடந்த 15 ஆம் தேதி வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போனார்.
பின்னர் கடந்த 17 ஆம் தேதி, அந்த சிறுமியின் வீட்டிற்கு கீழ் இருந்த மற்றொரு வீட்டில், உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது உடலின் பல பாகங்களில் காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளிக்கச் சென்றனர்.
எனினும் வழக்குப் பதிவு செய்ய காவல் துறையினர் மறுத்துள்ளனர். தகவலறிந்த மக்கள் சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்த தயானந்த் மருத்துவமனை வாசலில் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.
மேலும், இந்த போராட்டத்தில், பங்கேற்ற மற்றொரு சிறுமியை, காவல் துறை துணை ஆணையர் அலாவத், பலமுறை கன்னத்தில் அறைந்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
இதனிடையே, தயானந்த் மருத்துவமனையில் வசதிகள் போதவில்லை என்று கூறப்பட்டதைத் தொடர்ந்து பாலியல் கொடுமைக்கு ஆளான 5 வயது சிறுமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.