கல்பாக்கம், கூடங்குளம் அணு உலைகளை மூடக் கோரி நடைபயணம்- கொளத்தூர் மணி கைது

இந்த நடை பயண அறிவிப்பை வெளியிட்டதும் கன்னியாகுமரி நகரின் முக்கிய சந்திப்புகளில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நெல்லை-கன்னியாகுமரி, நாகர்கோவில்- கன்னியாகுமரி சாலைகளில் போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டனர். தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் டி.எஸ்.பி. பால கிருஷ்ணன் மற்றும் போலீசார் கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் கன்னியாகுமரியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.
இந்தநிலையில், காலை 11.30 மணி அளவில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் 100 பேர் கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு குவிந்தனர். சிறிது நேரத்தில் அங்கிருந்து கூடங்குளம் நோக்கி நடைபயணத்தை தொடங்கினர்.
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். இதில், தமிழர் தேசிய இயக்க மாநில பொது செயலாளர் பரந்தாமன் மற்றும் தமிழர் தேசிய பொதுவுடமை கட்சி, சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை இயக்கம் உள்ளிட்ட 15 இயக்கங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
எதிர்ப்பாளர்கள் நடைபயணமாக புறப்பட்டு சிறிது தூரம் சென்ற நிலையில் போலீசார் அவர்களைதடுத்து நிறுத்தி கைது செய்தனர். கொளத்தூர் மணி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அங்குள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பும், பதட்டமும் நிலவியது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரியும், முற்றுகை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், ஆரோக்கியபுரம், கன்னியாகுமரி, சின்னமுட்டம், கோவளம், புதுக்கிராமம், வாவத்துறை மீனவ கிராமங்களைச் சேர்ந்த கட்டுமரம், வள்ளம் மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.












Click it and Unblock the Notifications