தூத்துக்குடி: மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்த கணவர்!
தூத்துக்குடி: பாக்யராஜ் இயக்கி நடித்த அந்த 7 நாட்கள் படம் பார்த்திருப்பீர்கள். தன் மனைவியின் காதலனைத் தேடிப் பிடித்து மனைவியை ஒப்படைக்க முயல்வார் ராஜேஷ்.
கிட்டத்தட்ட அதே பாணியில் தூத்துக்குடியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் க்ளைமாக்ஸ்தான் வேறு!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே எம் கோட்டூர் கீழத்தெருவை சேர்ந்தவர் பெருமாள்சாமி மகன் மாயகண்ணன். இவருக்கும் சென்னை ஈச்சக்காட்டை சேர்ந்த ராமர் மகள் அழக்கம்மாள் என்பவருக்கும் கடந்த பிப் 17ம் தேதி திருமணம நடந்தது.
இருவரும் கோட்டூரில் குடும்பத்துடன் வசி்த்து வந்தனர். திருமணத்திற்கு பின்னர் அழகம்மாள் சோர்வுடன் காணப்பட்டார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி அழகம்மாள் திடீரென மாயமானார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் விசாரணை நடத்தியபோது அழகம்மாள் சென்னையில் உள்ள தனது காதலருடன் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரையும், சென்னை நங்கநல்லூரை சேர்ந்த வடிவேல் மகன் ராஜேசையும் போலீசார் எட்ட்யபுரத்திற்கு அழைத்து வந்தனர்.
போலீசாரிடம் அழகம்மாள் கூறுகையில், நானும் ராஜேசும் பள்ளியில் ஓன்றாக படித்தபோதே காதலித்து வருகிறோம். நான் கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படிக்கும் போது காதல் விவகாரம் எனது பெற்றோருக்கு தெரிய வந்தது. நாங்கள் வெவ்வேறு சமுகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் எனது படிப்பையும் நிறுத்தி விட்டு மாயகண்ணனுடன் திருமணம் செய்து வைத்தனர்.
திருமணத்திற்கு பின்னர் மனதளவில் வேதனையுடன் இருந்தேன். முதலிரவில் இதுகுறித்து எனது கணவர் என்னிடம் கேட்டார். அப்போதே எனது காதல் விவகாரத்தை அவரிடம் கூறினேன். அதிலிருந்து நாங்கள் ஓரே வீட்டில் பிரிந்து வாழ்ந்து வந்தோம். ஏப் 8ம் தேதி நான் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் ராஜேசை பார்க்க சென்னை சென்றேன்.
ஏப் 10ம் தேதி காஞ்சிபுரத்தில் உள்ள கோயிலில் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். மேலும் மாயகண்ணனுடன் வாழ விருப்பம் இல்லை. முறைப்படி விவாகரத்து பெற்ற பிறகு ராஜேசை திருமணம் செய்து கொள்கிறேன். அதுவரை எனது பெற்றோருடன் செல்கிறேன்," என அழகம்மாள் தெரிவித்தார்.
மாயகண்ணன் கூறுகையில், "திருமணமான பெண்ணுக்குரிய சந்தோசம் அழகம்மாளிடம் இல்லை. நான் கேட்டபோது அவரது காதல் விவகாரம் குறித்து கூறினார். நான் அதிர்ச்சி அடையவில்லை. அவருக்கும் என்னுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை," என்றார்.
கணவன்-மனைவி இருவரும் விவகாரத்துக்கு சம்மதம் தெரிவித்ததால் வழக்கு குறித்து விசாரணை நடத்திய எட்டயபுரம் சப்-இன்ஸ்பெக்டர் விக்டோரியா அற்புதராணி அழகம்மாளை பெற்றோருடன் அனுப்பி வைத்தார்.
திருமணமான இரண்டு மாதங்களில் கணவனை விட்டு காதலனை திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications