பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்! புயலைக் கிளப்ப தயாராகும் எதிர்க்கட்சிகள்
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி கூடியது. பிப்ரவரி 26-ந் தேதி ரயில்வே நிதிநிலை அறிக்கையும் 28-ந்தேதி பொது நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மார்ச் 22-ந் தேதி விடுமுறை விடப்பட்டது. இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது. இந்தக் கூட்டதொடர் மே மாதம் 10-ந் தேதி வரை நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. அதில் நிலம் வழங்குவோருக்கு 50% இழப்பீடு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் வேறு சில சட்ட மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழலில் பிரதமருக்கு தொடர்பில்லை என்று கூட்டுக் குழு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைத்து பிரச்சனையை கிளப்ப இருக்கின்றன. டெல்லியில் தொடரும் பலாத்கார சம்பவங்கள் மற்றும் டெல்லியில் மம்தா பானர்ஜி, மேற்கு வங்க நிதி அமைச்சர் ஆகியோர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்தும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்டவை பிரச்சனையை கிளப்ப இருக்கின்றன.
இதனால் நடப்பு கூட்டத் தொடர் பரபரப்பாக இருக்கும்.