சென்னையில் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ்: பாமக நிகழ்ச்சியில் பங்கேற்பு-ஜெயலலிதாவுடன் சந்திப்பு
சென்னை: பாமக வன்னியர் இளைஞர் சங்க மாநாட்டைத் துவக்கி வைக்க சென்னை வந்த உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.
மகாபலிபுரத்தில் பாமக நடத்தும் சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா வரும் 25ம் தேதி நடக்கிறது.
இதில் உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் சிங் யாதவ் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், அவரது வருகையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இன்றே அவர் சென்னை வந்தார். இன்று சென்னை ஐ.டி.சி. ஹோட்டலில் வன்னியர் இளைஞர் சங்க மாநாடு நடக்கிறது.
இதை அகிலேஷ் யாதவ் தொடங்கி வைத்துப் பேசினார். இந் நிகழ்ச்சிக்கு காடுவெட்டி ஜெ.குரு தலைமை தாங்கினார். இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ஆகியோரும் பேசினர்.
முன்னதாக அகிலேஷுக்கு பாமக சார்பில் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அகிலேஷ், தேசிய அளவில் 3வது அணி வர உருவாகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய காங்கிரசும், பாஜகவும் தவறி விட்டன.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்திக்க போகிறேன். அப்போது 3-வது அணி பற்றி பேச போவது இல்லை. அப்படி பேச்சு வரும் போது எனது தந்தை முலாயம் சிங் யாதவ் பேசுவார் என்றார்.
பாமக நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின் போயஸ் கார்டன் சென்ற அகிலேஷ் யாதவ் முதல்வர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
ஜெயலலிதா மற்றும் ராமதாசுடனான சந்திப்பின்போது மூன்றாவது அணி குறித்து அவர் விவாதித்தகாவே தெரிகிறது.