முகேஷ் அம்பானிக்கு சிஆர்பிஎப் கமாண்டோக்கள் 'இசட்' பிரிவு பாதுகாப்பு
மும்பை: ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு உயர் பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது. அவர் மீது தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக வந்த உளவுப் பிரிவு தகவல்களையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய ரிசர்வ் போலீஸ் படை கமாண்டோக்கள்...
மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கருப்புப் படை கமாண்டோக்கள் அவருக்கு இந்தப் பாதுகாப்பை அளிப்பர். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

நவீன ஆயுதங்கள்..
இந்தப் பாதுகாப்பின்படி முகேஷ் அம்பானிக்கு ஒரு பைலட் காரும், அவரது காருக்குப் பின்னால் நவீன ஆயுதங்கள் தாங்கிய படையினரும் பாதுகாப்பாக இருப்பர். நாட்டில் எந்தப் பகுதிக்கு அவர் சென்றாலும் 24 மணி நேரமும் இந்தப் பாதுகாப்பு அளிக்கப்படும்.

தனி நபருக்கு முதல் முறையாக இசட் பிரிவு பாதுகாப்பு
முகேஷ் பாதுகாப்புக்காக உடனடியாக 28 பேரை மத்திய ரிசர்வ் படை முகேஷ் நியமித்துள்ளது. நாட்டிலேயே ஒரு தனிப்பட்ட நபருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்தியன் முஜாகிதீன் மிரட்டல்...
சமீபத்தில் முகேஷ் அம்பானிக்கு இந்தியன் முஜாகிதீன் அமைப்பிடமிருந்து பல்வேறு மிரட்டல் கடிதங்கள் வந்தன. இது குறித்து மும்பை போலீசாருக்கும் மத்திய அரசுக்கும் முகேஷ் அம்பானி தரப்பிலிருந்து தகவல் தரப்பட்டது நினைவுகூறத்தக்கது.

மும்பை போலீசாரும் களமிறங்கினர்...
மத்திய பாதுகாப்புப் படையினர் தவிர மும்பை போலீசாரும் முகேஷ் அம்பானியின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். தெற்கு மும்பையில் அல்டாமவுண்ட் ரோட்டில் உள்ள அவரது மாபெரும் மாளிகைக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மேலும் அந்த வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தனது இசட் பிரிவு பாதுகாப்புக்கான செலவை முகேஷ் அம்பானியே ஏற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications