லாட்டரியில் ரூ. 1 கோடி பரிசு விழுந்த இளைஞர் மரணத்தை தழுவிய சோகம்
கோட்டையம்: கேரளாவில் லாட்டரி சீட்டு மூலம் கோடி ரூபாய் பரிசு வென்ற அதிர்ஷ்ட இளைஞர் ஒருவர், அந்த பணத்தை கண்ணில் காணும் முன்பாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ஷ்டம் அடித்தும் அதை அனுபவிக்க முடியாமல் உயிரிழந்த அந்த நபரின் பெயர் உண்ணி. அவர் திருவனந்தபுரம் அருகே பாலா என்ற ஊரில் பெற்றோருடன் வசித்து வந்தார்.
வந்த 24 வயதாகும் உண்ணிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கூலித்தொழில் செய்து பிழைத்து வந்தார்.
ஏழ்மையான வாழ்க்கை
தனது ஏழ்மையைப் போக்க அதிர்ஷ்டத்தை நம்பினார் உண்ணி. அதற்கு ஒரே வழி லாட்டரிச்சீட்டுதான் என்று நம்பி வருடக்கணக்கில் கட்டு கட்டாக வாங்கினார். ஆனால் பரிசுதான் விழுந்த பாடில்லை.
அதிஷ்ட தேவதை கண் திறந்தாள்
முயற்சியை கைவிடாத உண்ணி, தொடர்ந்து பரிசுச் சீட்டுக்களை வாங்கினார். சமீபத்தில் கேரள அரசு லாட்டரியான காருண்யா பாக்யஸ்ரீ என்ற லாட்டரி மூலம் உண்ணிக்கு அதிர்ஷ்டம் அடித்தது. முதல் பரிசான ரூ1. கோடி உண்ணிக்கு கிடைத்த உடன் பெற்றோரிடம் சொல்லி சொல்லி மகிழ்ந்தார் உண்ணி.
வங்கிக் கணக்கில் பணம்
பரிசு பணத்தை பெறுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியவருக்கு ஒரு கோடி ரூபாய் அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு விட்டதாக உண்ணிக்கு தகவல் கிடைத்தது.
உயிரிழந்த உண்ணி
வங்கியில் இருந்து பணத்தை எடுக்கப் போகும் முன்பாக அருகில் உள்ள வாய்க்காலில் குளிக்கப் போனார் உண்ணி. ஆனால் பரிதாபம், எதிர்பாராமல் உயிரிழந்து விட்டார் உண்ணி.
வாய்க்காலில் மிதந்த பிணம்
நீண்ட நேரமாகியும் உண்ணி வீடு திரும்பாத காரணத்தால் அவரை தேடி பெற்றோர்களும், உறவினர்கள் அங்கு சென்றனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வாய்க்காலில் உண்ணி பிணமாக மிதந்து கொண்டிருந்தார்.
சோகத்தில் மூழ்கிய பெற்றோர்
லாட்டரியில் பரிசு விழுந்ததால் மகிழ்ச்சியில் இருந்த உண்ணியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை அந்த பரிசு பணத்தை பெறும் முன்பே உண்ணி உயிரிழந்தது சோகத்தில் ஆழ்த்தியது.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்தும் அதை அனுபவிக்க முடியாமல் மகன் உயிரிழந்து விட்டானே என்று எண்ணி அவரது பெற்றோர்கள் அழுது புரண்டனர்.