லோக்சபா தேர்தலில் லக்னோவில் போட்டியிடுகிறார் நரேந்திர மோடி?

குஜராத் முதல்வரான நரேந்திர மோடிதான் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என்பதை பல நேரங்களில் அக்கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் மறைமுகமாக உணர்த்தி வருகிறார். இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் போட்டியிட்ட லக்னோ தொகுதியில் 'பிரதமர் வேட்பாளர்' நரேந்திர மோடி போட்டியிட திட்டமிட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதற்கு ராஜ்நாத்சிங்கும் ஆதரவு தெரிவித்திருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
நரேந்திர மோடியின் மிக நெருங்கிய நண்பரான அமித் ஷாவும் இனி மோடிக்கு உதவியாக டெல்லி அரசியல்தான் என முடிவு செய்துவிட்டாராம். அவரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருக்கிறார். அவர் அனேகமாக அத்வானி போட்டியிட்டு வென்ற காந்தி நகர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த காந்திநகர் தொகுதியில்தான் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி போட்டியிட்டு எம்.பியானார். ஆனால் அத்வானி, தற்போது மோடிக்கு எதிரான முகாமில் இருப்பதால் அவர் இம்முறை மத்திய பிரதேச மாநிலம் போபாலுக்கு இடம் பெயர முடிவு செய்திருக்கிறார்.
தற்போது காந்திநகர் தொகுதியில் அமித் ஷா போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பதாலேயே மோடியும் 'பிரதமர் வேட்பாளர்' தொகுதியான லக்னோவுக்கு புலம் பெயர முடிவு செய்திருப்பதாக டெல்லி பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications