இலவச கண் அறுவை சிகிச்சை செய்த 8 பேர் பார்வை இழந்த பரிதாபம்
கான்பூர்: கான்பூரில் இலவச முகாமில் கண் அறுவைசிகிச்சை செய்துகொண்ட 8 பேர் பார்வை இழந்துள்ளனர். இதில் ஐவர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில், கான்பூர் அருகே உள்ள கரவ்சா என்ற கிராமத்தில், கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதியன்று, சமூக சேவை நிறுவனம் ஒன்றின் சார்பாக, இலவச கண் சிகிச்சை முகாம் ஒன்று நடைபெற்றது. இதில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிலர், விழித்திரை மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டனர். அதன்பின்னர், அவர்களுக்கு கண்ணில் எரிச்சல் தோன்றியுள்ளது. என்ன செய்வது என்று தெரியாமல், அவர்க கடந்த இரண்டு மாதங்களாக, ஒவ்வொரு மருத்துவமனையாக சென்றுள்ளனர்.
மாவட்ட அரசு மருத்துவமனையில், அவர்களைப் பரிசோதித்த அரசு மருத்துவர்கள், அவர்களின் கண் பார்வை திரும்பக் கிடைப்பது குறித்து எதுவும் கூற இயலவில்லை என்றனர். மேலும், பெரும்பாலானோருக்கு கண்களில் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களின் பார்வைத்திறன் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கண்பார்வை பாதிக்கப்பட்ட எட்டு பேரில், ஐந்து பேர் பெண்களாவர். அறுவைசிகிச்சை செய்த தொண்டுநிறுவனம் குறித்து அவர்கள் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்படவில்லை. அவர்களுக்குத் தக்க நஷ்டஈடு வழங்கப்படவேண்டும் என்றும், தொண்டுநிறுவனத்தின் வாயிலாக சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், சிங் என்ற வாலிபர் ஒருவர் தெரிவித்தார்.
இலவச சிகிச்சை அளிப்பதாகக் கூறிய அவர்கள், சிகிச்சை முடிந்தபின் ஒவ்வொருவரிடமும் தலா 2,500 முதல் 4,000 வரை பணம் பெற்றுக்கொண்டதாகப் பாதிக்கப்பட்ட பாலா பிரசாத் கூறினார். சிகிச்சைக்குமுன் மங்கலாகத் தெரிந்த பார்வை, தற்போது சுத்தமாகத் தெரியவில்லை என்று அவர் வேதனைப்பட்டார்.












Click it and Unblock the Notifications