பெங்களூர் குண்டுவெடிப்பு: அல் உம்மா தலைவரைத் தேடும் போலீஸ்
பெங்களூர்: பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக அல் உம்மா தலைவரை போலீஸ் தேடி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் பெங்களூரில் இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் வாகனங்கள் எரிந்து போனதோடு 11 போலீசார் காயமடைந்தனர். இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அல் உம்மா தலைவருக்கும் தற்போதைய குண்டு வெடிப்பிற்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஆர்.அசோக் கூறியதாவது:
குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக பஷீர், மொகிதீன், புகாரி, பீர் மொகிதீன் ஆகிய 4 பேர் வெளி மாநிலத்தில் கைது செய்யப்பட்டு பெங்களூர் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் ஒரு நபருக்கு தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் அத்வானியை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. பெங்களூரில் நடைபெற்ற குண்டு வெடிப்பு பா.ஜனதா தலைவர்களை குறி வைத்து நடத்தப்பட்ட சம்பவம் என்று சொல்வதில் தவறு இல்லை.இந்த குண்டு வெடிப்பு பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் குறிக்கோள் என்ன? அவர்களுடைய இலக்கு யார்? என்ற விவரங்கள் அனைத்தும் விசாரணையில் தெரியவரும்.
அல் உம்மா தலைவர்
பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்க தலைவர் அன்வர் பாஷாவுக்கு முக்கிய பங்கு இருப்பது தெரியவந்துள்ளது. தலைமறைவாகிவிட்ட பாஷாவை கைது செய்ய தமிழ்நாடு போலீசாருடன் இணைந்து கர்நாடக போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பற்றிய தகவல் எங்களுக்கு கிடைத்து உள்ளது. அவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications