டெல்லியில் என்ன நடக்கிறது.. நினைக்கவே அதிர்ச்சியாக இருக்கிறது: ஹைகோர்ட் நீதிபதி கவலை
டெல்லி: டெல்லியில் என்ன நடக்கிறது. .பலாத்கார சம்பவங்களை நினைத்தாலே அதிர்ச்சியாக இருக்கிறது.. இப்படி நடக்க என்ன காரணம் என்பதை உடனே கண்டறிய வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி. முருகேசன் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் அதிகரித்திருக்கும் பலாத்கார சம்பவங்கள் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, டெல்லியில் என்ன நடக்கிறது என்று நினைத்தால் அதிர்ச்சியாக உள்ளது. இப்படி நடக்க என்ன காரணம் என்பதை முதலில் கண்டறிய வேண்டும். எங்கேயோ, எதிலேயோ தவறு நடக்கிறது. மக்கள் பலரும் முட்டாளாகி வருகின்றனர். இதுபோன்று திடீரென பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரிக்கக் காரணம் என்ன என்பதை டெல்லி காவல்துறையினர் கண்டறிந்து, உடனடியாக அதன் ஆணி வேரை பிடுங்க வேண்டும்.
இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் பெரும்பாலான குற்றவாளிகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்து தங்கியிருப்பவர்களாகவே உள்ளனர். எனவே அவர்கள் இதுபோன்ற தவறுகளில் ஈடுபடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்லியில் நடந்து கொண்டிருப்பதை பார்க்கும் போது அனைவருமே கவலை அடைந்துள்ளனர். சமீபத்தில் 5 வயது சிறுமிக்கு என்ன நேர்ந்திருக்கிறது என்று பாருங்கள். எனவே, தற்போது இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க என்ன வழி என்பதை பார்க்க வேண்டும். இதுபோன்ற குற்றங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளில் உள்ள காவல்துறையினருக்கு சிறப்பு பயிற்சி அளித்து, குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதி முருகேசன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications