'யூனிபார்மை கழட்ட வச்சிடுவேன்': அகிலேஷ் யாதவுக்கு அடுத்தடுத்து ஆப்பு வைக்கும் அமைச்சர்கள்....
லக்னோ: ‘‘என்னை கேட்காமல் எந்த போலீஸ்காரனும் சீட்டில் உட்கார கூட முடியாது'' என்று உத்தர பிரதேச அமைச்சர் பேசியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், அகிலேஷ் யாதவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில், அவருடைய அமைச்சர்கள் பலரும் அடாவடியாக பேசி வருகின்றனர்.
நா யாரு தெரியுமில்ல...
எடாவில் நேற்று பேசிய ஜவுளித் துறை அமைச்சர் சிவகுமார் பெரியா, ‘‘என் தொகுதிக்கு வந்து பாருங்கள். 5வது முறையாக எம்எல்ஏ.வாக இருக்கிறேன். என் தொகுதியில் என் உத்தரவு இல்லாமல் எந்தவொரு போலீஸ்காரனும் சீட்ல உட்கார கூட மாட்டான். எந்தவொரு வேலையையும் செய்ய மாட்டான். என் பேச்சை எப்படி கேட்காமல் போவான்?
வேலையில் இருந்து தூக்கிவிடுவேன்...
நாங்கள் என்ன எதிர்க்கட்சியா? கவர்மென்ட்டே நாங்கள்தான். என் பேச்சை கேட்காமல் போனால், ஒரு நொடி கூட வேலையில் இருக்க முடியாது. 24 மணி நேரத்தில் யூனிபார்மை கழற்றி வீட்டுக்கு அனுப்பி விடுவேன்'' என்றார்.
அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்ப்பா...
பதேபூரில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் பேசிய பால்வளத் துறை அமைச்சர் ராம்மூர்த்தி வர்மா, ‘‘உத்தர பிரதேசத்தில் சில குற்றங்கள் நடக்கத்தான் செய்யும். யார் பதவியில் இருந்தாலும் தடுக்க முடியாது'' என்றார்.
குறையொன்றும் இல்லை...
அதே போல், மதுராவில் சுற்றுலா துறை அமைச்சர் ஓம் பிரகாஷ் சிங்கிடம், சட்டம் ஒழுங்கு பற்றி நிருபர்கள் சிலர் கேள்வி கேட்டதால் ஆத்திரமடைந்தார். ‘‘சட்டம் ஒழுங்கில் எந்த குறையும் இல்லை. உங்கள் மனதில்தான் குறை இருக்கிறது'' என்று எரிந்து விழுந்தார்.












Click it and Unblock the Notifications