ஊடுருவல் விவகாரம்:பாகிஸ்தானை மிரட்டுவதை போல சீனாவையும் எச்சரிக்க வேண்டும்: ஒமர் அப்துல்லா
ஜம்மு: எல்லையில் ஊடுருவல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பாகிஸ்தானை மிரட்டுவதைப் போல சீனாவையும் கடுமையாக எச்சரித்தால்தான் ஊடுருவல்கள் இனி நடைபெறாது என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துலா வலியுறுத்தியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் லோகாய்-மல்கார் என்ற இடத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உமர் அப்துல்லா, சீன ராணுவத்தினர் 15 கிலோ மீட்டர் தூரம் வரை இந்தியாவுக்குள் ஊடுருவி வந்துவிட்டதற்காக நாம் கத்தி கூப்பாடு போடுகிறோம். இதே நடவடிக்கையை பாகிஸ்தான் மேற்கொள்ளும் போது இருநாடுகளிடையேயான கிரிக்கெட் போட்டிகளை ரத்து செய்கிறோம், கால்பந்து விளையாட மாறுக்கிறோம், அமைதி உடன்படிக்கைகளை சஸ்பென்ட் செய்கிறோம்.. வர்த்தக உறவுகளை நிறுத்துகிறோம்...ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இருந்து வெளியேறாதவரை இருதரப்பு வர்த்தகம் நடைபெறாது என்று அறிவிக்கிறோம். ஆனால் சீனாவின் ஊடுருவல் விவகாரத்தில் அப்படி ஒன்றும் கடுமையான நிலைப்பாட்டை நாம் மேற்கொள்ளவில்லை.. நாம் பேச்சுவார்த்தை மேஜை முன்புதான் அமர்ந்திருக்கிறோம்.
சீனாவுக்கு மத்திய அரசு கடுமையான ஒரு செய்தியைத் தெரிவிக்க வேண்டும். இது போன்ற ஊடுருவல்களால் அப்பிராந்தியத்தில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. 20 ஆண்டு கால ஆயுத வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வந்து இப்போதுதான் அமைதிப் பணிகளை தொடங்கியிருக்கிறோம். ஜம்மு காஷ்மீரத்து மக்கள் அமைதியாக வாழ உறுதியான நடவடிக்கைகள் அவசியம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications