தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்படுத்திய அந்த 5 சந்திப்புகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் எப்ப வேண்டுமானாலும் வரலாம் என்று யூகங்கள் உலாவிக் கொண்டிருக்கும் நிலையில் அண்மைக்காலமாக சில பல சந்திப்புகள் தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கிக் கொண்டிருக்கிறது.

தமிழக அரசியல் வரலாற்றில் எதிர்பாராமல் நடக்கும் சில சந்திப்புகள்தான் கூட்டணிகளுக்கு விதை போடக் கூடியதாக இருந்திருக்கின்றன. அந்த வகையில் எதிரும் புதிருமாக வலம் வந்து கொண்டிருப்பவர்களும் சரி... எப்போது யூகங்களுக்குக் காரணமானவர்களாக இருப்பவர்களும் சரி திடீர் திடீரென சந்தித்து தமிழக அரசியலில் உஷ்ணத்தைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றனர்.

அண்மைக்காலமாக தமிழக அரசியலில் நிகழ்ந்து வரும் 5 திடீர் சந்திப்புகள் லோக்சபா தேர்தலுக்கான ஒரு கூட்டணிக்கான பாதையை அமைத்துக் கொடுத்திருக்கிறது என்றே கருதலாம்.. அந்த 5 சந்திப்புகளை கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாமா...

வைகோ- ஜெயலலிதா சந்திப்பு

வைகோ- ஜெயலலிதா சந்திப்பு

மதுவிலக்கு கோரி நடைபயணம் சென்று கொண்டிருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சிறுதாவூர் செல்லும் வழியில் திடீரென தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்தித்து நல்ம் விசாரித்தார். மேலும் எதற்காக நடைபயணம் போகின்றீர்கள்? என்று வைகோவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாராம் முதல்வர் ஜெயலலிதா. ஏற்கெனவே தேமுதிகவை கழற்றிவிட்டுவிட்ட நிலையில் லோக்சபா தேர்தலுக்கு ஒரு வலுவான கூட்டணி அமைக்க முனைப்பு காட்டுகிறார் ஜெயலலிதா. அவரது விருப்பப் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிச்சயம் கூட்டணியில் இடம்பெறும். ஈழப் பிரச்சனையில் தமிழகத்தின் உணர்வு நிலையை வெளிப்படுத்துகிற முகத்துடன் வலம் வரும் தமக்கு ஈழத் தமிழர் பிரச்சனை என்றாலே நினைவுக்கு வரும் வைகோ உடன் இருப்பது பலமாக இருக்கலாம் என்றும் ஜெயலலிதா விரும்பியிருக்கலாம். இதற்கான முதல் 'ஒத்திகையாக'வே வைகோவையே நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் ஜெயலலிதா என்பது பொதுவாக சொல்லப்படும் 'தியரி'...

'எதிரி' காங்கிரசாருடன் 'திமுக' அழகிரி சந்திப்பு

'எதிரி' காங்கிரசாருடன் 'திமுக' அழகிரி சந்திப்பு

மத்திய அரசில் இருந்து திமுக வெளியேறும் என்று அறிவிப்பு வெளியானதை சகிக்காதவராக இருந்தவர் திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாலர் மு.க. அழகிரி. அவர் தமது வெறுப்பை பிரதமரை தனியாக சந்தித்து காட்டினார். பின்னர் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களை தனித்தனியே சந்தித்து என்னவோ எல்லாம் யூகத்துக்கு சுழிப்போட்டு வைத்தார் அழகிரி. அவருடன் நட்புக்காக நெப்போலியனும் வலம் வந்தார். லோக்சபா தேர்தலில் காங்கிரஸ்- திமுக கூட்டணி உருவாகாத நிலையில் திமுகவுக்கு எதிராக காங்கிரஸ் நிற்கும் போது அழகிரி ஆதரவாளர்கள் காங்கிரஸை ஆதரிப்பார்களோ? திமுகவை உடைப்பாரோ என்றெல்லாம் கிசுகிசுக்கப்பட்டது.

கருணாநிதி - விஜயகாந்த் சந்திப்பு

கருணாநிதி - விஜயகாந்த் சந்திப்பு

ராஜ்யசபா தேர்தலை முன்னிட்டு கடந்த சில மாதங்களாகவே திமுக- தேமுதிக இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று செய்திகள் உலாவிக் கொண்டிருக்கின்றன. திமுகவோ காங்கிரஸ் இல்லாத நிலையில் தேமுதிகவுடன் கூட்டணி வைத்தாக வேண்டிய நிலையில்தான் இருக்கிறது. இதனால் தேமுதிகவுக்காக சட்டசபையிலும் வெளியிலும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இதன் உச்சகட்டமாக ஒருங்கிணைந்து குரல் கொடுப்போம் வாரீர் என்று பகிரங்கமாகவே முரசொலியில் கடிதமும் எழுதினார். இந்த நிலையில் தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்தப் போன இடத்தில் 'வணக்கம் தலைவரே' என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தும் 'வணக்கம் தம்பி' என்று கருணாநிதியும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு புகைப்படத்தை திமுக தலைவர் கருணாநிதியே ஃபேஸ்புக்கில் ரிலீஸும் செய்தார்.

ஜி.கே. வாசனுடன் அழகிரி- கனிமொழி சந்திப்பு

ஜி.கே. வாசனுடன் அழகிரி- கனிமொழி சந்திப்பு

திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் உருவெடுத்துவிட்ட நிலையில் தமக்கும் செக் வைக்கிறாரே என்ற கோபத்தில் மதுரையில் மு,.க.அழகிரியைப் போர்த்தவர் கனிமொழி. இந்த நிலையில் சென்னையில் ஜி.கே.வாசனை அழகிரியும், கனிமொழியும் தனித்தனியே பார்த்திருக்கின்றனர். ஜி.கே.வாசனோ, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸை மீண்டும் தொடங்கப் போவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அழகிரியும் கனிமொழியும் எதற்காக சந்தித்தார்கள் என்பதும் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜெயலலிதா- உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் சந்திப்பு

ஜெயலலிதா- உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் சந்திப்பு

இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் சந்திப்பு களேபரங்களை நடத்திக் கொண்டிருக்க பாமக மூலம் தேசிய அளவில் பரபரப்பை உருவாக்கும் ஒரு சந்திப்பு நடந்தேறியது. பாமகவின் நிகழ்ச்சிக்காக வந்த உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அப்படியே தலைமை செயலகத்துக்கும் போய் முதல்வர் ஜெயலலிதாவையும் 25 நிமிடம் சந்தித்துப் பேசிவிட்டுத் திரும்பியிருக்கிறார். தேசிய அரசியலில் மூன்றாவது அணியைப் பற்றி பேசிக் கொண்டு பிரதமர் கனவில் இருப்பவர் முலாயம்சிங் யாதவ். அவரது இந்த கனவுக்கு பலம் சேர்க்கும் வகையில்தான் சென்னை சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு இன்னமும் எத்தனை சந்திப்புகள் வரப்போகிறதோ?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+