'தம்பி' விஜயகாந்தின் கட்சியை ஒழிக்க முயற்சிக்கிறார்கள்: கருணாநிதி
தென் சென்னை மாவட்ட திமுக சார்பில் திருவான்மியூரில் தமிழக சட்டசபையில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசியதாவது,
இந்த அதிமுக ஆட்சியில் அவர்களது கட்சினர் என்றால் ஒரு நீதி, எதிர்கட்சிகள் திமுகவானாலும் சரி, தேமுதிகவானாலும் சரி அவர்களுக்கு ஒரு நீதி. திமுகவும், வேறு சில எதிர்கட்சிகளையும் அடக்குவதற்கு ஏன் பச்சையாகவே கூறுகிறேன், தம்பி விஜயகாந்தின் கட்சியை ஒழிக்க நடக்கும் முயற்சிகளையெல்லாம் நீங்கள் அறிவீர்கள்.
காவல் துறையை கையில் வைத்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. தவறுகள் செய்தவர்கள் மீது தனது அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக ஜெயலலிதா கூறி வருகிறார். ஆனால் திருச்சியைச் சேர்ந்த டாக்டர் ராணி அதிமுக எம்.எல்.ஏ. (பரஞ்சோதி) மீது கொடுத்த புகார் மட்டும் ஏன் அவர் கண்ணுக்கு தெரியவில்லை.
நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த ராணி அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் பேசினார். 538 நாட்களாகியும் இந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டவில்லை என்று தெரிவித்தார். தனக்கும், தனது குழந்தைக்கும் சாவு நெருங்குகிறது என்றும், தங்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு அதிமுக எம்.எல்.ஏ. தான் காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த 2 ஆண்டு காலமாக செய்தித்தாள்களில் வரும் இந்த செய்தி முதல்வருக்கு ஏனோ தெரியவில்லை. சுமார் 2 மணிநேரம் அளித்த போலீஸ் மானியத்திற்கான பதிலில் ராணியின் செய்தி இடம்பெறவில்லை. இடம்பெற்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று அவருக்கு தெரியும். அதனால் தான் அதை மறைத்துவிட்டார். தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் ஜெயலலிதாவுக்கு இந்த ராணி படும்பாடு ஏனோ தெரியாமல் போய்விட்டது.
ஆள் கடத்தல் செய்து நில அபகரிப்பில் தொடர்புடைய அமைச்சர் செந்தில் பாலாஜி போன்றவர்களை அரசு பாதுகாப்பது ஏன். திமுகவை அழிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை கைது செய்து அலைக்கழித்து அவர் இறக்க காரணமாக அதிமுக அரசு இருந்தது என்றார்.