சென்னையில் குறி சொல்லும் சாமியார் வெட்டிக் கொலை
சென்னை: சென்னை சூளைமேட்டில் குறி சொல்லும் சாமியார் ஒருவர் பட்டப் பகலில் நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த ஜானகிராம் (45) தனது வீட்டு அருகே பவானி அம்மன் கோவில் கட்டி அங்கு சாமியாடி குறி சொல்லி வந்தார். அதே பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் அமர்ந்தும் பக்தர்களுக்கு குறி சொல்வார். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இவரிடம் குறி கேட்க ஏராளமான பக்தர்கள் வருவது உண்டு.
மேலும் மாந்திரீகம் செய்வது, செய்வினை வைப்பது, செய்வினை அகற்றுவது, பேய் விரட்டுவது போன்ற மாந்திரிகச் செயல்களிலும் ஈடுபட்டு வந்தார். பாட்ஷி சுவாமி என அழைக்கப்பட்டு வந்தார்.
இன்று சித்ரா பெளர்ணமியையொட்டி இவர் பவானி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார். நடராஜா தியேட்டர் அருகே உள்ள பாலமுருகன் கோவிலில் இருந்து பவானி அம்மன் கோவிலுக்கு மாலை பால்குட ஊர்வலம் நடத்தி, அம்மனுக்கு அபிஷேகம் செய்ய இருந்தார். இதற்காக பெரிய அளவில் விளம்பரங்களும் செய்திருந்தார்.
இந் நிலையில் இன்று காலை 7 மணிக்கு வீட்டருகே உள்ள டீக் கடைக்கு சென்ற இவரை ஆட்டோ வழி மறித்தது. அதிலிருந்து இறங்கிய 5 பேர் ஜானகிராமை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் முகம், கழுத்து, கை உள்ளிட்ட பல இடங்களில் வெட்டு விழுந்த அவர் சரிந்து விழவே வெட்டிய கும்பல் ஆட்டோவிலேயே தப்பிவிட்டது.
அவரை பொது மக்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிறிது நேரத்தில் அவர் இறந்தார். பட்டப் பகலில் சாமியார் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவரது மாந்திரிக செயலால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இவரை கொலை செய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications