பொதிகை மலை அகஸ்தியரை தரிசிக்க தமிழக பக்தர்களுக்கு கேரள வனத்துறை தடை!
நெல்லை: பொதிகை மலையில் அகஸ்திய பெருமானுக்கு தமிழக பக்தர்கள் பூஜை செய்ய கேரள அரசு அனுமதி மறுத்துள்ளதால் அவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
பொதிகை மலை உச்சியில் அகஸ்திய பெருமானுக்கு சிலை உள்ளது. இந்த சிலைக்கு தமிழ் புத்தாண்டான சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தில் சிறப்பு பூஜை நடக்கும். தமிழகம் முழுவதும் இருந்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
சுமார் 60 வருட காலமாக பாபநாசம் பாணதீர்த்தம் வழியாக பக்தர்கள் பொதிகை உச்சிக்கு சென்று இந்த பூஜையை நடத்தி வந்தனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு இந்த பாதை வழியாக செல்ல கூடாது என தடை விதித்தது. இதனால் தமிழக பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர். ஆனாலும் கேரள வழியாக பொதிகை மலைக்கு செல்ல கேரள அரசு அனுமதி அளித்து வந்தது.
100 பேர் அனுமதி:
இதற்காக ஜனவரி 14ம் தேதி முதல் சிவராத்திரை வரை 100 பேர் வரை சென்று வர கேரள அரசு அனுமதித்தது. அதனபின் மே மாதம் முதல் ஸ்பேஷல் பேக்கேஜ் என்ற வகையில் தினமும் சுமார் 60 பேர் வரை அனுமதிக்கப்பட்டனர். ஒருவருக்கு தலா ரூ.800 வரை கட்டணம் வசூக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு கேரள வனத்துறையினர் பொதிகை மலை பயண அனுமதியை அதிரடியாக குறைத்து விட்டனர்.
ஸ்பேஷல் பேக்கேஜ்:
5 பேர் வரை மட்டுமே ஸ்பேஷல் பேக்கேஜ் முறையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் கீழே வந்த பிறகே மற்ற 5 பேர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதாவது வாரத்துக்கு 500 பேர் சென்று வந்த இடத்தில் தற்போது 10 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அடுத்த ஆண்டு யாருக்கும் அனுமதி அளிக்கப்படாது என கேரள வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பக்தர்கள் வேதனை:
தமிழக பக்தர்கள் குழுவினர் திருவனந்தபுரத்தில் உள்ள வனத்துறை அதிகாரியை சந்தித்தபோது, அவர் கேரள முதல்வர் உத்தரவிட்டால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று உறுதியாக கூறி விட்டார். இதனால பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.